பக்கம் எண் :

சீறாப்புராணம்

1748


இரண்டாம் பாகம்
 

4805. இமய வெற்பென் றிலங்கிய மாடங்க

     ளமையுஞ் செல்வ மதீனத்தை யாள்கென

     நுமையி லாமைமுன் னோக்கி யுரைத்தவர்

     தமைய வூர்க்குத் தனியென வைத்தனர்.

7

      (இ-ள்) அவ்வாறு வந்து கூட, நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் நுமையிலா றலியல்லாகு அன்கு அவர்களை முன்னாகப் பார்த்து நீவிர் மகாமேருப் பருவதத்தைப் போன்று பிரகாசிக்கின்ற மாளிகைகள் தங்கிய செல்வத்தையுடைய திரு மதீனமாநகரத்தை ஆட்சி செய்யுமென்று சொல்லி அவர்களை அந்த நகரத்திற் ஒப்பில்லையென்று சொல்லும் வண்ணம் வைத்தார்கள்.

 

4806. ஈன மொன்றற் றெழுபதென் றெண்ணிய

     கூன வொட்டகத் தைக்குறு பான்செய

     வூன மன்றிக் கொணர்தியென் றோதிநற்

     றானை சூழத் தலைக்கடைக் கெய்தவே.

8

      (இ-ள்) அவ்வாறு வைத்துச் சிறுமை யொன்றுமின்றி எழுபது என்று கணக்கிட்ட கூனலையுடைய ஒட்டகங்களைக் குறுபான் செய்வதற்காகக் களங்கமில்லாமற் கொண்டு வாருங்களென்று கட்டளை செய்து நல்ல சேனையானது வளையும் வண்ணந் தெருவாசலில் வர.

 

4807. பருப்ப தத்தைச் சினந்து பனைக்கையாற்

     றருப்பி டித்தொடித் துத்தறு கண்ணிணை

     நெருப்பு குத்து நெருங்குமொன் னாரெயின்

     மருப்பி டித்த மதாசலஞ் சூழவே.

9

      (இ-ள்) மலைகளைத் தனக்கு நிகரில்லை யென்று கோபித்துப் பனைமரத்தைப் போன்ற துதிக்கையினால் மரங்களைப் பற்றி முறித்துக் குரூரத்தைக் கொண்ட இரு கண்களாலும் அக்கினியைப் பொழிந்து நெருக்கா நிற்குஞ் சத்துராதிகளாகிய காபிர்களது கோட்டை மதில்களைக் கொம்புகளினாலிடித்த மதத்தையுடைய யானைகள் சூழவும்.

 

4808. தூய மேரு கிரியினைச் சுற்றிவான்

     மேய வாம்பரி வெம்மையை யெய்தவே

     வாயு வேகமும் வாதமென் றோய்வுறப்

     பாயும் வேகப் பரிபுடை சூழவே.

10