பக்கம் எண் :

சீறாப்புராணம்

1756


இரண்டாம் பாகம்
 

அதிகரிக்கப் பெற்றோம். இந்தத் துன்பத்தை நீங்களல்லாமல் வேறு நீக்குவோர் யாவர்? ஒருவருமில்லார்.

 

கலிநிலைத்துறை

 

4832. என்று நின்றவ ரியாவரு மிசைத்திட விரங்கி

     நன்றி யோர்வடி வாகிய நாயகர் மகிழ்ந்து

     துன்றி நாழிகை தனிலொரு தூணியைத் துறந்து

     குன்று நேர்புய சகுபியி லொருவர்கைக் கொடுத்து.

34

      (இ-ள்) என்று அங்கு நின்ற அசுஹாபிக ளனைவருஞ் சொல்ல, நன்மையே ஒப்பற்ற வடிவமாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் கருணைக் கூர்ந்து களித்து நெருங்கிய தங்களது அம்பறாத்துணியைத் திறந்து அதிலுள்ள ஓரம்பை மலைகளையொத்த தோள்களையுடைய அசுஹாபிமார்களில் ஒரு அசுஹாபியினது கரத்திலீந்து.

 

4833. மடுவி னிற்செறி கமலமெய் திடச்சிறை வண்டை

     யிடுதி நள்ளிடை யென்றவ ரேவிட வேவைக்

     கொடுசென் றன்னவ ருறவியி னனந்தலைக் குயிற்றத்

     தொடுவ வன்னவப் புழைதிறந் தனவனஞ் சொரிந்தே.

35

      (இ-ள்) சிறகையுடைய இவ்வம்பைக் குளத்திற் செறிந்த நீரானது அகப்படும் வண்ணம் நடுத்தலத்தி லிடுவீராகவென்று அவர்கள் கட்டளையிட, அந்த அம்பைக் கொண்டு அவ் வசுஹாபி போய்க் குளத்தினது நடுத்தலத்திற் பதிக்க, ஆறுங்கடலுஞ் சந்திக்குமிடத்தைப் போல, அப் புழையானது திறந்து நீரைப் பொழுந்தது.

 

4834. கொடுக்கும் வள்ளியோர் மனையினிற் செறிநிதிக் குவைபோல்

     வடுப்ப டாதநன் னெறியுறு தீன்வளர் வதுபோ

     லடுக்கு மன்பருக் குதவிசெய் நபிமனத் தருள்போற்

     றடுக்க லாத்துறைப் பெருக்கெனப் பெருகின தாங்கல்.

36

      (இ-ள்) அவ்வாறு பொழிய, அக்குளமானது கொடுக்கின்ற வள்ளல்களது வீட்டின் கண் செறிந்த திரவியக் குவியல் போலவும், குற்றப்படாத நல்ல ஒழுங்கைப் பொருந்தி தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கம் வளர்வதைப் போலவும், வந்து சேர்ந்த அன்பர்களுக்கு உதவி செய்கின்ற நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்லல மவர்களது மனத்தின்