பக்கம் எண் :

சீறாப்புராணம்

1758


இரண்டாம் பாகம்
 

4838. அன்றி யுஞ்செழுங் ககுபத்துல் லாவிற்சென் றணுகி

     நன்றி சேர்கச்சு செய்திடா திடர்சில நடத்தி

     நின்று வெஞ்சம ரும்முடன் பொரவென நினைத்துத்

     துன்று கின்றன ரென்றனன் கபீபெதிர் சொலுவார்.

40

      (இ-ள்) அன்றியும், நீங்கள் செழிய ககுபத்துல்லாவிற் போய் நெருங்கி நன்மை பொருந்திய ஹ்ஜ்ஜைச் செய்யாதபடி சில தீங்குகளை நடத்தி உங்களோடு நின்று வெவ்விய யுத்தத்தைச் செய்ய வேண்டுமென்று கருதி நெருங்கி யிருக்கின்றார்களென்று சொன்னான். அதற்குப் பதிலாக ஹபீபென்னுங் காரணப் பெயரையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள்சொல்லுவார்கள். 

 

4839. புரிசை சூழ்மக்க மாநகர்க் காபிர்முன் போரில்

     வெருவி யோடினர் நாலைந்து விசையவர் மேனாஞ்

     செருவி ளைத்திட வந்தில மனமகிழ் சிறப்ப

     வரிய கச்சுமு றாச்செய வந்தன மடுத்தே.

41

      (இ-ள்) கோட்டைமதிற் சூழ்ந்த திருமக்கமா நகரத்தினது காபிர்கள் ஆதியில் நாலைந்து தடவை யுத்தத்திற் பயந்து ஓடினார்கள். இப்போது நாங்கள் அவர்கள் மீது யுத்தஞ் செய்யும்படி வரவில்லை. மனதின்கண் சந்தோஷமானது சிறக்கும் வண்ணம் அருமையான ஹஜ்ஜூ முறாச் செய்யும்படி நெருங்கி வந்தோம்.

 

4840. இயைந்தி டாதவர் போர்செய்ய வேண்டுமென் றிகலி

     னயந்து நானொரு தலமுநற் றவணையு நவில்வன்

     வியந்து காபிர்க ளனைவரு மவ்விட மேவி

     வயந்த ரப்பொர வருவரேல் வருதிரென் றுரையும்.

42

      (இ-ள்) அதற்கு அவர்கள் சம்மதிக்காமல் யுத்தமே செய்ய வேண்டுமென்று விரோதித்தால் நான் விரும்பி நல்ல ஒரு இடத்தையும் ஒரு அவதியையும் சொல்லுவேன். அந்தக் காபிர்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு அவ்விடத்திற் பொருந்தி வலிமை தரும் வண்ணம் யுத்தஞ் செய்ய வருவார்களானால் வாருங்களென்று நீர் சொல்லும்.

 

4841. இருவ ரும்பொரும் போரினி லவரிடைந் துடையிற்

     சுருதி கூறிசு லாமெனுந் தூயநற் குலத்தி

     லொருமை யாய்வரச் சொலுமவர் மறுப்பரே லுடனாய்

     பருக வன்னவருயிரினை விண்ணிடை படுப்போம்.

43