பக்கம் எண் :

சீறாப்புராணம்

1759


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அப்படி யாங்களிருவர்களுஞ் செய்யும் யுத்தத்தில் அவர்கள் வசங்கெட்டுத் தோற்பார்களே யானால் அவர்களைப் புறுக்கானுல் அலீமென்னும் வேதமானது சொல்லுகின்ற தீனுல் இஸ்லா மென்னும் பரிசுத்தத்தைக் கொண்ட நன்மை பொருந்திய கூட்டத்தில் ஒற்றுமையாய் வரும்படி சொல்லும் அதற்கும் அவர்கள் மறுப்பார்களானால் அவர்களது தேகங்களை நாய்கள் உண்ணும் வண்ணம் அவர்களது ஆவியை ஆகாயத்தின் கண் செல்லச் செய்வோம்.

 

4842. அதற்கி சைந்தந்த நாள்வரை பொறாமனின் றடர்ந்து

     மதக்கு றும்பினாற் பொருவரேற் சுற்றினும் வளைந்து

     கதக்கொ டுந்தொழிற் காபிரைக் கருவற விரைவிற்

     சிதைத்தெந் நாடொறுந் தீனிலை நிறுத்துவோஞ் செகத்தில்.

44

      (இ-ள்) அதற்கு உடன்பட்டு அந்த நாள் வரைப் பொறுக்காமல் நின்று நெருங்கிச் சமயப் பொல்லாங்கினால் யுத்தஞ் செய்வார்களேயானாற் கோபத்தைக் கொண்ட கொடிய தொழிலையுடைய அந்தக் காபிர்களைச் சுற்றிலுஞ் சூழ்ந்து அவர்களது கருவானது அற்றுப் போகும் வண்ணம் வேகத்திற் கெடுத்து இவ்வுலகத்தின்கண் எந்நாளுந் தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தை நிலையாக நிற்கச் செய்வோம்.

 

4843. ஆதி யாணைதப் பாதென வருணபி யியம்பப்

     போதமீறிய புதையில்கேட் டுளங்களி பூண்டு

     காதல் கூர்தர மக்கத்துக் காபிருக் கிதனை

     யோது வேனென விடைகொண்டு போயின னுடனே.

45

      (இ-ள்) யாவற்றிற்கும் முதன்மையான அல்லாஜல்ல ஜலாலகு வத்த ஆலாவின் பேரிற் சத்தியமாக இது தவறாதென்று காருண்ணியத்தையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் சொல்ல, அதை அறிவு மிகுத்த அந்தப் புதையிலென்பவன் கேள்வியுற்று மனதின்கண் சந்தோஷத்தைத் தாங்கி அன்பானது அதிகரிக்கும் வண்ணம் இதை யான் போய் மக்கமா நகரத்தின் கண்ணுள்ள காபிர்களுக்குச் சொல்லுவேனென்று சொல்லி உடனே விடைபெற்றுக் கொண்டு போனான்.

 

4844. வந்து மக்கமா நகருறுங் காபிர்மா டணுகிக்

     கந்த நாறுமெய் முகம்மதைக் கண்டவ ணிருந்து

     சிந்தை கூர்சில செய்திகேட் டும்முழைப் புகுந்தேன்

     புந்தி மிக்குளீர் புகலெனி லியானவை புகல்வேன்.

46