பக்கம் எண் :

சீறாப்புராணம்

1760


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு போய்த் திரு மக்கமா நகரத்தின் கண் தங்கிய காபிர்களிடத்தில் நெருங்கிக் கஸ்தூரி வாசனையானது பரிமளியா நிற்குங் காத்திரத்தை யுடைய முகம்ம தென்பவரைப் பார்த்து அங்கே தங்கி மனமானது சந்தோஷிக்கின்ற சில வார்த்தைகளைக் கேட்டு உங்களிடத்து வந்து சேர்ந்தேன். மிகவும் அறிவை யுடையவர்களே! நீங்கள் அவற்றைச் சொல்லென்று சொன்னால் யான் அவற்றைச் சொல்லுகின்றேன்.

 

4845. என்று கூறுலு மவர்களிற் சிறிதுசிற் றினத்தார்

     நின்று நீர்சொலுஞ் சொலிற்பொருந் தோமென நிகழ்த்த

     வன்றி யுஞ்சில பெயர்மனத் தறிவின்மிக் கவர்க

     ணன்று தீதெனக் கேட்டறி வோமென நயந்தே.

47

      (இ-ள்) என்று சொன்ன அளவில், அந்தக் காபிர்களிற் சில துன்மார்க்கர்கள் நின்று கொண்டு நீவிர் சொல்லுகின்ற வார்த்தைகளில் யாங்கள் பொருந்தமாட்டோமென்று சொல்ல, அன்றியும், மனத்தினது அறிவினால் மேன்மைப்பட்ட காபிர்களான சில பெயர்கள் அது நல்லது தீயதென்று கேட்டுத் தெரிவோமென்று விரும்பி.

 

4846. சொல்லு வீரெனக் கேட்டலுந் தூதர்முன் னுரைத்த

     வல்ல வாசக மனைத்தையும் புதையில்நேர் வழங்கக்

     கல்லை நேர்புயன் காபிரி லொருவனற் கருத்தோ

     னொல்லை நீதிகற் றுணர்ந்தவன் மஸ்வூதுசொல் உறுவா.

48

      (இ-ள்) நீவிர் சொல்லுமென்று கேட்ட அளவில், றசூலான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் ஆதியிற் சொல்லிய வலிமையையுடைய சமாச்சாரங்க ளெல்லாவற்றையும் புதையிலென்பவன் ஒழுங்காய்ச் சொல்ல, மலையையொத்த தோள்களையுடையவனுங் காபிர்களிலொருவனும் நல்ல கருத்தையுடையவனும் பழமையான நியாயங்களை யெல்லாம் படித்தறிந்தவனுமான கீர்த்தியைக் கொண்ட மசுவூது மகன் உறுவா வென்பவன்.

 

அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

4847. இருந்தவ னெழுந்து காபி ரெவரையும் போற்றி யேத்தித்

     திருந்தயான் சொலும்விண் ணப்பஞ் செவித்துணைக் கேறா தேனும் 

     வருந்திய மழலை வார்த்தை கேட்டதாய் மகிழ்வ போனீர்

     பொருந்திடக் கேட்பி ராகி னன்குறப் புகல்வே னென்றான்.

49