பக்கம் எண் :

சீறாப்புராணம்

1762


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) நீங்காத நற்குணத்தையுடையவர்களே! நீங்களனைவர்களு முடன்பட்டு என்னை அந்த முகம்மதென்பவரிடத்தில் அனுப்புவீர்களே யானால் சொல்லத் தகுவனவாகிய களங்கமற்ற சில வார்த்தைகளைச் சொல்லித் திரும்பி வருவேன். இதில் உங்களுக்கு உறுதி யாது? என்று கேட்க, அவர்கள் விரைவில் அவ்வாறு போவாயாகவென்று விடையளித்தார்கள். அவனும் நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களிடத்திற் போய்ச் சேர்ந்தான்.

 

4851. அவ்விடத் துறுவா வந்த செய்தியை யறிந்து போற்றாத்

     தெவ்வடர்த் திகல்செய் வாட்கைத் திருநபி யவனை நோக்கி

     யொவ்விட வுவமை யில்லாப் புதைலொடு முரைத்த தெல்லா

     மிவ்விடத் தியம்பி னார்மற் றெதிர்மொழி யவனுஞ் சொல்வான்.

53

      (இ-ள்) அங்கே அவ்வாறு உறுவாவென்பவன் வந்த சமாச்சாரத்தைத் தங்களைப் பணியாத சத்துராதிகளை நெருக்கிப் போர் செய்கின்ற வாளாயுதத்தைத் தாங்கிய கையையுடைய தெய்வீகந் தங்கிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தெரிந்து அவனைப் பார்த்து ஒப்பற்ற புதையிலென்பவனோடு பொருந்தும் வண்ணஞ் சொல்லிய சமாச்சாரங்க ளெல்லாவற்றையும் இங்குஞ் சொன்னார்கள். அதற்கு அந்த உறுவாவென்பவனும் பதில் வார்த்தை சொல்லுவான்.

 

4852. மறுவிலா நீதி வாய்மை முகம்மது நபியே மக்காக்

     குறைசிக ளெல்லா மும்மைக் குழீஇயின கிளைக ளன்றோ

     வறமதோ கிளையுள் ளோரை யறுத்துவேர் களைவ தன்றித்

     திறனுறும் வெற்றிப் பாடுஞ் சிறக்குமோ சிறந்திடாதே.

54

      (இ-ள்) களங்கமற்ற நியாயத்தைக் கொண்ட வார்த்தைகளையுடைய முகம்மது நபியே! திரு மக்கமா நகரத்தின்கண் ணிருக்கின்ற குறைஷிக ளியாவரும் உங்களைக் கூடின பந்துக்களல்லவா? உங்களது பந்துக்களாயுள்ளவர்களை வெட்டி அவர்களது வங்கிஷத்தை யில்லாமற் செய்வது புண்ணிமா? அன்றியும் அப்படி செய்கின்ற வலிமை பொருந்திய வெற்றிப்பாடுஞ் சிறக்குமா? சிறக்காது.