பக்கம் எண் :

சீறாப்புராணம்

179


முதற்பாகம்
 

416. சிறுவர்க ளுரைக்கு மாற்றங் கேட்டபின் செபுற யீலு

    மறநெறி மீக்காயீலு மதிசயித் தகத்தி னுள்ளே

    முறுவல்செய் துரையா தொன்று மொழிந்தில ராகிச் செவ்வி

    நிறைமுகம் மதுவைச் சேர்ந்த நிழலிடைப் படுத்தல் செய்தார்.

26

     (இ-ள்) இந்தப் படியாக அப்பாலியர்களனைவரும் சொல்லும் வார்த்தைகளைத் தரும நெறியினையுடைய ஜிபுரீல் அலைகிஸ்ஸலாமவர்களும் மீக்காயீல் அலைகிஸ்ஸலாமவர்களும் கேள்வியுற்ற பின்னர் மனசினுள் வியப்படைந்து யாதொரு வார்த்தைகளும் பதில் சொல்லாதவர்களாய்க் குறுநகை செய்து அழகானது நிறையப்பெற்ற நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களைப் பொருந்திய அந்த உகாமரத்தினது நிழலின்கண் படுக்கும்படி செய்தார்கள்.

 

417. படுத்தொளி பரப்புஞ் செவ்வி முகம்மதைப் பார்த்துக் கூன்வா

    ளெடுத்துநாற் றிசையு நோக்கி யியல்பெற வுரத்தி னேரே

    வடுப்பட வூன்றி நொய்தாய் வகிர்ந்திடும் போதி னெஞ்சந்

    திடுக்கொடு பதறி நின்ற சிறுவர்கள் சிதறி னாரே.

27

     (இ-ள்) பூமியின்மீது அவ்விதம் மல்லாந்து கிடந்து பிரகாசமானதை எவ்விடமும் பரவும்படி செய்யும் அழகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை ஜிபுரீல் அலைகிஸ்ஸலா மவர்கள் நோக்கித் தாங்கள் கொண்டு வந்திருந்த வளைவு தங்கிய வாளினைக் கையிலெடுத்து நான்கு திசைகளையும் திரும்பிப் பார்த்துத் தகுதி பொருந்த அவர்களின் மார்பின் நேராய்க் காயப்படும்படி யூன்றி மிக மிருதுவாகக் கீறிடும் அந்தச் சமயத்தில், அதைப் பார்த்து நின்ற மற்றும் பாலியர்கள் மனமானது திடுக்கமுடன் நடுக்கமுற்று நான்கு திசைகளிலும் ஒருவரையொருவரறியாது சிதறி யோடிப் போனார்கள்.

 

418. நேயமுற் றுரத்தைக் கீண்டு நிறையொளி பொங்குங் கஞ்சக்

    காய்முகைக் கிழித்துள் ளுற்ற கறுப்பொடு கசடு மான

    மாயவன் கூற்றை மாற்றி வழுவறக் கழுவி மாறா

    தாயுநன் னினைவீ மானல் லறிவுட னிரப்பல் செய்தார்.

28

     (இ-ள்) தேவர்களான அவ்விருவர்களும் அவ்வாறு அன்புற்று நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களின் மார்பைக் கீறி பூரணப்பட்ட பிரபையானது ஓங்காநிற்கும் இருதயக் கமலக்காயாகிய முகையைப் பிளந்து அதனகம் பொருந்திய கறையுடன் கசடு முதலாகிய தீமையையுடைய கடுமையான பாகங்களை யொழித்து மீக்காயீல் அலைகிஸ்ஸலாமவர்களது கையின் கண்ணிருந்த கெண்டியிலுள்ள ஜலத்தினால் குற்றமறப்