பக்கம் எண் :

சீறாப்புராணம்

1812


இரண்டாம் பாகம்
 

எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

4987. குடவயி றுளைந்து கூப்பிடும் பேழ்வாய்க்

         கூன்பிடர்ச் சுரிமுகச் சங்க

     மடலவிழ் முளரிப் பொகுட்டினி லுயிர்த்த

         மணியினைப் பவளவா யன்னந்

     திடமுறச் சினையென் றிறையினா லணைத்துத்

         திளைத்தடை கிடக்கும்பல் வலப்பா

     னடமுடைக் கவனப் பரிபுடை சூழ

         வதிந்தனர் நபிமுகம் மதுவே.

76

      (இ-ள்) அவ்வாறு விட, நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிது ஹாமிது அஹ்மது மஹ்மூது முகம்மது முஸ்தபா காத்திமுல் அன்பியா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் குடத்தைப் போன்ற வயிறானது சூலினால் வருந்திச் சத்திக்கா நிற்கும் பெரிய வாயையும், கூனைக் கொண்ட பிடரையும், சுரித்த முகத்தையுமுடைய சங்கங்கள் இதழ்கள் விரிந்த தாமரையினது கொட்டையாகிய அடிப்பக்கத்திலீன்ற முத்தங்களைப் பவளத்தைப் போன்ற வாயையுடைய அன்னப்பட்சிகள் வலிமையுறும் வண்ணந் தங்களது கருவென்று நினைத்துச் சிறகுகளினால் தழுவி நெருங்கி அடைகிடக்கின்ற ஒரு தடாகக் கரையில் நடனத்தையுடைய வேகத்தைக் கொண்ட குதிரை வீரர்கள் பக்கத்திற் சூழும் வண்ணந் தங்கினார்கள்.

 

4988. சேயுயர் கடவு ணாவலி னிழற்கீழ்ச்

         சிறப்புடன் சகமக ளுவந்து

     பாயிருட் படம்போர்த் துறைந்துகண் வளரப்

         படர்திரைக் குடதிசை புகுந்தான்

     மாயிருட் குடம்பை சீத்துவிட் டெறியும்

         வாண்மதி வெண்டிரை முகட்டி

     னாயிர மபிதா னம்முடைக் குரிசி

         லானனம் போலுதித் ததுவே.

77

      (இ-ள்) அவ்வாறு தங்க, செம்மையானது ஓங்கப் பெற்ற சூரியனானவன் நாவலின் நிழலினடியில் இப்பூமியாகிய பெண்ணானவள் சிறப்போடும் மகிழ்ச்சியடைந்து பரவிய அந்தகாரமாகிய படத்தைப் போர்த்துத் தங்கி நித்திரை செய்யும் வண்ணம் படர்ந்த அலைகளை யுடைய மேல்பாற் சமுத்திரத்தின்கண் போய் நுழைந்தான். மாயா நிற்கும் அந்தகாரமாகிய குடம்பையைச் சீத்து வீசும் பிரகாசத்தையுடைய சந்திரனானது வெள்ளிய கீழ்பாற் சமுத்திரத்தினது உச்சியில் ஆயிரந் திருநாமங்களையுடைய குரிசிலான நமது நாயகம் நபிகட்