பக்கம் எண் :

சீறாப்புராணம்

1822


இரண்டாம் பாகம்
 

மதிக்கும்படி ஓங்கிய கோட்டை மதிலாற் சூழப்பட்ட திருமதீனமா நகரத்தின்கண் போனார்கள்.

 

5010. இருவிசும் பூர வலஞ்சுழன் றேகு

          மெழுபரிப் பருதிகண் டேங்கி

     வெருவறும் வங்கூ ழாட்டிட நுடங்கும்

          வெண்கொடி மாடமுஞ் சிறந்து

     வருமலை மழலைச் சிறுவரி னெடுந்தேர்

          குழித்திடு மணிமறு கிடமுங்

     கருமுகி லகலாச் சுடுநிலத் தமைத்த

          சாலையும் பலபல கடந்தார்.

99

      (இ-ள்) அவ்வாறு போய்ப் பெரிய ஆகாயத்தில் தவழும் வண்ணம் வலமாகச் சுழன்று செல்லும் ஏழு குதிரைகளையுடைய சூரியனானவன் பார்த்து ஏக்கமுற்று அச்சமடையா நிற்குங் காற்றானது அசைக்க, அதனாலசையும் வெள்ளிய துவஜங்களையுடைய மாடங்களையும், மேலான அரிய மலையைப் போன்ற மழலைச் சொற்களையுடைய பாலியர்களது நெடிய இரதங்கள் குழியாக்கும் அழகிய வீதியினது தானங்களையும், கரிய மேகங்கள் நீங்காத சுடுகின்ற நிலத்தின்கண் அமையச் செய்த சாலைகளையும் அனேகமாகத் தாண்டினார்கள்.

 

5011. சொற்பொருள் சிதகாப் பாயிரம் பாகைச்

          சுருதிநூல் வல்லவர் தம்பாற்

     கற்பவ ரோது நனியறச் சாலைக்

          கடைத்தலை மறுகையுங் கடந்து

     கவிற்பொதி தவள வெண்ணிலா மணியால்

          வியனுறத் திருத்திய றவுலா

     விற்புகுந் திருந்தா ரிமையவர் பணிகேட்

          டிறைஞ்சிட வருமிற சூலே.

100

      (இ-ள்) தேவர்களான மலாயிக்கத்துமார்கள் ஏவல் கேட்டு வணங்கும் வண்ணம் வரா நிற்கும் றசூலான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் சொல்லினது அருத்தத்திற் சிதகாத பாயிரங்களையும் அத்தியாயங்களையுமுடைய வேத சாஸ்திரங்களில் வல்லவர்களான பண்டிதர்களிடத்துப் படிப்பவர்கள் ஓதுகின்ற மிகுந்த தருமச்சாலைகளையும் கடைத்தலைகளையுமுடைய வீதிகளையுந் தாண்டிப் பிரகாசத்தாற் பொதியப்பட்ட வெண்மையான ஒளியையுடைய முத்துக்களால் ஆச்சரியமானது பொருந்தும் வண்ணங் கட்டப்பட்ட திருறவுலாவின்கண் நுழைந்தார்கள்.