பக்கம் எண் :

சீறாப்புராணம்

1825


இரண்டாம் பாகம்
 

தோண்டப்பட்ட சமுத்திரஞ் சூழ்ந்த இப்பூலோக முழுவதையும் ஒப்பற்ற புயவலியினால் தாங்கா நிற்கும் அரசரான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைப் பார்த்துப் பிடரின்கண் செறிந்த மதத்தையுடைய வரியைக் கொண்ட நீண்ட கழுத்தைப் பெற்ற ஒட்டகத்தினது மடியிற் கறந்த பாலுங் கெட்ட நாற்றத்தைக் கொண்ட அதன் சிறுநீரும் எங்களுக்குக் குடிப்பதற்குக் கிடையாவென்று சொன்னார்கள்.

 

5016. கறைகுடி யிருந்து புலால்வெறி கமழுங்

          கவரிலை வேலுடைக் குரிசி

     னிறைபொறை யறியாக் கயவரை நோக்கி

          நிகழ்த்துதற் கரியசக் காத்தின்

     றொறுவமர்ந் துறையு மவணிட மேவித்

          தோன்றிடும் பிணியின்ன றவிர

     வுறைபசும் பாலு முவர்படு நீரு

          முண்டிடப் போதிரென் றுரைத்தார்.

5

      (இ-ள்) அவர்கள் அவ்வாறு சொல்ல, இரத்தக் கறையானது மாறாது குடியாக இருக்கப் பெற்று ஊனினது வாசனையானது பரிமளிக்கா நிற்குங் கவரைக் கொண்ட தகட்டுவடிவமான வேலாயுதத்தையுடைய குரிசிலாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிது ஹாமிது அஹ்மது மஹ்மூது முகம்மது முஸ்தபா காத்திமுல் அன்பியா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் நிறையையும் பொறையையு முணராத கீழ்மக்களான அவர்களைப் பார்த்துச் சொல்லுதற் கருமையான சக்காத்தினது ஒட்டகங்கள் நிறைந்து தங்கியிருக்கும் அந்தத் தானத்திற் பொருந்தி உங்களது சரீரத்தின்கண் ணுண்டாயிருக்கும் நோயினது துன்பமானது அகலும் வண்ணம் அவ்வொட்டகங்களி னிடத்துத் தங்கிய பசிய பாலையும் உவரைப் பொருந்திய நீரையும் அருந்தும்படி போகுங்களென்று சொன்னார்கள்.

 

5017. மணிமுடி யிடறி வடுவிருந் தொளிரு

          மலர்க்கழ லிறைஞ்சிமுட் செறிந்து

     பணர்விரிந் தெழுந்த பாதவக் கடத்து

          ணிறைந்திடுந் தொறுவிட முறைந்து

     நிணமுவர் கிடந்து முடைவெடி நாறு

          நீருடன் பாலுமுண் டிடவெம்

     பிணியொடு மிடியு முடைந்தன தேகம்

          பெருத்தினி திருக்குமந் நாளில்.

6