பக்கம் எண் :

சீறாப்புராணம்

216


முதற்பாகம்
 

நடத்திக் கொண்டு போய் அவ்விடத்திலிருக்கும் ஒரு கற்பாறையானது ஆசனமென்று சொல்லும்படி பொருந்திய தலத்தின்கண் இருக்கும்படி செய்தார்கள்.

 

     531. இருகையு நபிதமை யேந்தச் சொல்லித்தன்

        னிருகர நபிதிருக் கரத்தை யேந்தியே

        யிருவரு மிரங்கிநின் றிரந்து நோக்கவே

        யிருவிசும் பிடைமழை யிறைத்த தெங்குமே.

50

     (இ-ள்) அங்ஙனம் இருக்கும்படி செய்து நபிறசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைத் தங்களின் இரண்டு கைகளையும் ஏந்தும்படி அப்துல் முத்தலிபவர்கள் கூறித் தங்களது இரண்டு கைகளினாலுமந் நபிநாயகமவர்களின் தெய்வீகம் பொருந்திய கைகளைத் தாங்கிக் கொண்டு இரண்டு பேர்களும் அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவை நினைத்து உருகி மன்றாடி நின்று மேலே பார்க்கப் பெரிய ஆகாயத்தின் கண்ணிருந்து மழையானது எவ்விடமும் சொரிந்தது.

 

     532. பாரினிற் பெரும்புனல் பரந்த செல்வமித்

        தாருடை முகம்மதின் பறக்கத் தாலென

        வூரினிற் றலைவருக் கியம்பி யுண்மகிழ்ந்

        தேர்பெறு மப்துல்முத் தலிபி ருந்தனர்.

51

     (இ-ள்) அவ்வாறு எவ்விடமும் சொரியவே அழகு பொருந்திய அப்துல் முத்தலிபவர்கள் இப்பூமியின்கண் பெரிய ஜலமானது பரப்புற்ற இந்தச் செல்வமானது யாருடையது? நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் பறக்கத்தாலுடையதென்று அந்த மக்கமாநகரத்திலுள்ள முதன்மையான யாவர்களுக்குங் கூறி அதனால் மனமகிழ்ச்சி யடைந்திருந்தார்கள்.

     

     533. நறைபொழி லபசுநன் னாட்டின் சேனையை

        அறபிகள் பொருதுவென் றாரென் றோதிய

        திறனுறு செய்திகேட் டிதுவுஞ் செவ்விநூ

        லிறைநபி பொருட்டலா திலையென் றோதினார்.

52

     (இ-ள்) அன்றியும், அறபிகளானவர்கள் வாசனை பொருந்திய சோலைகளையுடைய நன்மை தங்கிய ஹபஷிநாட்டினது படையை அடர்ந்து வெற்றி யடைந்தார்களென்று சொல்லிய வலிமை மிகுந்த சமாச்சாரத்தை அவ்வப்துல் முத்தலிபவர்கள் காதுகளினாற் கேள்வியுற்று இதுவும் அழகிய சாஸ்திரங்களுக்கெல்லாம் தலைவரான நபி முகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் காரணத்தினாலல்லாமல் வேறேயொன்றினாலு மில்லையென்று சொன்னார்கள்.