முதற்பாகம்
556.
வாய்ந்த முத்திரைக்
குறியுஞ்செங் கரங்களின் வனப்புந்
தோய்ந்து சீறடி
படியுறாப் புதுமையுஞ் சுடரால்
வேய்ந்த மெய்யினின்
மாசணு காததும் விறலோ
னாய்ந்து நன்னபி
யிவரெனத் திடமுற வறிந்தான்.
18
(இ-ள்)
நபி றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் சரீரத்தில் பொருந்திய இலாஞ்சனையினது அடையாளத்தையும்,
சிவந்த கைகளினது அழகையும், சிறிய பாதங்கள் பூமியின்கண் தோயாத புதுமையையும், பிரகாசத்தினால்
மூடப்பட்ட திருமேனியின்கண் யாதொரு குற்றமணுகாததையும், வெற்றியையுடைய அவன் ஆராய்ந்து நமது நபி
இவர்தானென்று திடமுறும்படி யுணர்ந்தான்.
557.
அறிந்து ணர்ந்தபண்
டிதனபித் தாலிபை யழைத்துச்
சிறந்த வாதனத் திருத்தித்தன்
செவ்விதழ் திறந்து
பிறந்த வூர்குல
நும்பெய ரிப்பெரும் பெயரோ
டுறைந்த
பிள்ளையின் பெயர்தெரி தரவுரை யென்றான்.
19
(இ-ள்)
அவ்விதந் தெரிந்துணர்ந்த புகைறாவென்னும் அந்தப் பண்டிதன் அபீத்தாலிபவர்களைக் கூப்பிட்டு
அலங்காரம் பொருந்திய ஒரு தவிசின் மேலிருக்கச் செய்து தனது சிவந்த அதரங்களை விண்டு நீர்
பிறந்த வூரினது பெயரையும் உமது குலத்தின் பெயரையும் உம்முடைய பெயரையும் இந்தப் பெரிய கூட்டமாகிய
ஜனங்களோடு தங்கியிருக்கின்ற பிள்ளையினது பெயரையும் எனக்குத் தெரியும்படி சொல்லுமென்று கேட்டான்.
558.
ஆதி மக்கமூர்
கிளையது னான்குலத் தாசீ
மோது மியானபித் தாலிபென்
பின்னவ னுயிரின்
போத ரத்தின னப்துல்லா
தருதிருப் புதல்வன்
மாத வனிவன் பெயர்முகம்
மதுவென வகுத்தார்.
20
(இ-ள்)
அவ்வாறு அப்பண்டிதன் கேட்க அபீத்தாலிபவர்கள் எனது ஊர் யாவற்றிற்கும் முதன்மையான மக்கமா
நகரம். கிளையில் அதுனான்கிளை. குலத்தில் ஹாஷீம் குலம். யாவர்களும் கூறா நிற்கும் நான்
அபீத்தாலிபு. எனது உயிர் போன்ற தம்பியும் கல்வியில் இரத்தினமுமான அப்துல்லாவென்பவர்தந்த
தெய்வீகத்துவமுடைய குமாரராகிய மகாதவத்தைக் கொண்டவரான இவரது பெயர் முகம்மதென்று
சொன்னார்கள்.
559.
பைத்த டப்பணி நெளிதர
விண்டுகள் பரப்ப
மொய்த்த வொட்டையு
மிடபமு முழக்கொடு நடத்தி
யெத்த லத்தினுக்
கேகுவிர் நீவிரென் றியம்ப
வித்த கர்பொழில்
சாமினுக் கெனவிளம் பினரே.
21
|