முதற்பாகம்
(இ-ள்) அன்றியும்
சிறியேனாகிய யான் இந்தப் பெரிய பூமியின்மீது ஏகமாய்த் தனியே பிறந்து கையில் பொருந்திய
யாதொரு திரவியமுமில்லாமல் இருந்து வாழுவது அறிவீனமாகும். அதனால் செல்வத்தையுடைய அழகிய
சாமிராச்சியத்தில் போய் அங்கு செய்யக் கூடிய யாதாவது ஒருவர்த்தகத் தொழிலைச் செய்து முடித்துக்
கொண்டு விரைவினில் மீண்டு வருவேன். அதற்குத் தங்கள் மனத்தினது கிருபை எவ்வாறிருக்கின்றதோ?
அதை யானறிய மாட்டேனென்று சொன்னார்கள்.
603.
மகனுரைத் தவையுந்
தங்கண் மனைவறு மையையு மெண்ணி
யகநினை யறிவு நீங்கி
யாகுலக் கடலின் மூழ்கி
வகையுறத் தேறிச் செவ்வி
முகம்மதின் வதன நோக்கி
நகுகதிர் முறுவற் செவ்வாய்
திறந்துபின் னவில லுற்றார்.
7
(இ-ள்)
அபீத்தாலிபவர்கள் அவ்வாறு தங்கள் புதல்வர் கூறிய வாசகத்தையுந் தங்களின் வீட்டினது தரித்திரத்தையும்
நினைத்து மனசின்கண் யோசியா நிற்கும் அறிவு மொழிந்துத் துன்பமாகிய சமுத்திரத்தி லாழ்ந்துப்
பின்னர் முறைமை பொருந்தும்படி தேறுதலடைந்து அழகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின்
முகத்தைப் பார்த்து ஒளிர்கின்ற பிரகாசந் தங்கிய பற்களையுடைய சிவந்த வாயினைத் திறந்து
சொல்ல ஆரம்பித்தார்கள்.
604.
என்னுயிர்த் துணைவ
னீன்ற விளங்கதிர்ப் பருதி யேயிந்
நன்னிலத் தரிய பேறே
நங்குடி குலத்துக் கெல்லாம்
பொன்னுநன் மணியு மென்னப்
பொருந்துநா யகமே தேறா
வொன்னலர்க் கரியே
கேளென் னுளத்தினி லுற்ற தன்றே
8
(இ-ள்)
எனது உயிர் போன்ற சகோதரரான அப்துல்லா வென்பவர் பெற்ற இளங்கிரணங்களையுடைய சந்திரனானவரே!
இந்த நன்மை தங்கிய பூமிக்கு அரிய பேறானவரே! நமது கோத்திரம் கூட்டம் முதலிய யாவற்றிற்கும்
நல்ல திரவியமும் இரத்தினமுமென்று சொல்லும்படி பொருந்தா நிற்கும் நாயகமானவரே! தேறாத சத்துராதிகளென்னும்
யானைகட்குச் சிங்கமானவரே! நீவிர் என்னுடைய மனசின்கண் பொருந்திய சமாச்சாரத்தைக் கேட்பீராக.
605.
மன்றலந் துடவை சூழ்ந்த
மக்கமா நகரில் வாழ்வோன்
றென்றிசை வடக்கு மேற்குக்
கிழக்கெனுந் திக்கு நான்கும்
வென்றிகொள் விறலோன்
செம்பொன் விழைதொழி லவருக்கெல்லாங்
குன்றினி லிட்ட
தீபங் குவைலிது வென்னும் வேந்தன்.
9
|