பக்கம் எண் :

சீறாப்புராணம்

242


முதற்பாகம்
 

      (இ-ள்) வாசனை பொருந்திய வழகிய சோலைகள் சூழப் பெற்ற மக்கமா நகரத்தின்கண் வாசஞ் செய்யப்பட்டவன். அன்றியும், தென்திசை வடதிசை மேற்திசை கீழ்திசை என்று சொல்லும் நான்கு திசைகளையும் வெற்றி கொள்ளா நிற்கும் வீரத்தையுடையவன். சிவந்த திரவியத்தை விரும்பிய தொழில்களை யுடையவர்கட் கெல்லாம் மலையின்மேல் வைத்த தீபமானவன். குவைலிது என்று சொல்லும் பெயரினையுடைய மன்னவன்.

 

606. இருகரஞ் சேப்பச் செம்பொ னிரவலர்க் கீய்ந்த தாலு

    மரியமெய் வருந்த நாளு மருந்தவம் புரிந்த தாலுங்

    கருதிய வரத்தி னாலுங் கதிருமிழ்ந் தொழுகும் பைம்பொன்

    வரையினின் மணிக்கொம் பென்ன வருமொரு மகவை யீன்றான்.

10

     (இ-ள்) அப்படிப்பட்ட மன்னவனானவன் யாசகர்கட்கு இரண்டு கைகளும் சிவப்பையடையும்படி சிவந்த திரவியங்களைக் கொடுத்ததினாலும், தனது அரிதான சரீரமானது நோவும்படி எந்நாளும் பெரிய தவத்தைச் செய்ததினாலும், தான் கருதிய வரப்பிரசாதத்தினாலும், கிரணங்களை யுமிழ்ந்து ஒழுகா நிற்கும் பசிய பொன்மலையின்கண் இரத்தினக் கொம்பைப் போல வராநின்ற ஒரு புதல்வியைப் பெற்றான்.

 

607. தேன்கட லமிர்துந் திக்கிற் றிகழ்வரை யமிர்துஞ் சூழ்ந்த

    மீன்கட னடுவிற் றோன்றும் வெண்மதி யமிர்துந் துய்ய

    கூன்கட வளையார் வெண்பாற் குரைகட லமிர்துஞ் சோதி

    வான்கட லமிர்து மொன்றாய் வடிவெடுத் தனைய பாவை.

11

     (இ-ள்) அப்புதல்வி சத்தசாகரத்தி லொன்றாகிய தேன் கடலினது அமுதமும், நான்கு திக்குகளிலும் பிரகாசியா நிற்கும் மலைகளினது அமுதமும், பூமியைச் சூழ்ந் திருக்காநின்ற மல்சியங்களையுடைய சாகரத்தின் நடுவில் உதயமாகா நிற்கும் வெள்ளிய சந்திரனது அமுதமும், பரிசுத்தமான வளைந்த உடலைக் கொண்ட சங்கினங்களைப் பெற்ற ஒலி தங்கிய வெண்மை நிறத்தையுடைய பாற்கடலினது அமுதமும், பிரகாசத்தையுடைய ஆகாயக் கங்கையினது அமுதமும், ஒன்று சேர்ந்து ஒரு வடிவம் எடுத்ததைப் போன்ற பாவையானவள்.

 

608. பைங்கட லுடுத்த பாரிற் பன்மணி வரையிற் றீவிற்

    செங்கதிர்க் கனக நாட்டிற் செழுமணி மனைக்கு நாளுந்

    தங்கிய சுடரு மொவ்வாத் தனித்தனி யழகு வாய்ந்த

    மங்கையர் தனையொப் பென்ன வகுக்கநா வகுத்தி டாதே.

12