|
முதற்பாகம்
பிரகாசந்தங்கிய பற்களையுடைய
வாயினைத் திறந்து சொர்ண மாரியானது நானென்று கொடுக்கா நிற்கும் சிவந்த கையினையுடைய கிருபை
யென்னும் சமுத்திரமாகிய அபீத்தாலிபவர்கள் சொன்னார்கள்.
618.
தரைத்தலம் புகழும்
வெற்றித் தடப்புயத் தபித்தா லீபு
முரைத்தவை யனைத்துந்
தேர்ந்து முகம்மது முளத்தி னூடு
வருத்தமுஞ் சிறிது நேர
மகிழ்ச்சியுந் தொடர்ந்து தோன்றக்
கருத்தினி லிருத்தித்
தாதை கழறல்சம் மதித்தி ருந்தார்.
22
(இ-ள்)
நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் இப்பூமியெங்கும் புகழா நின்ற வெற்றி தங்கிய பெரிய
தோள்களையுடைய அபீத்தாலிபவர்கள் அவ்விதம் சொல்லியவை முழுவதையுந் தெளிந்து மனசினகம்
கொஞ்ச நேரம் துன்பமும் கொஞ்ச நேரம் சந்தோஷமும் தொடர்ச்சியாயுண்டாகத் தங்களது பெரிய
தந்தையாரான அவர்களின் வாசகத்தைச் சிந்தையின்கண் இருக்கும்படி செய்து சம்மதித்திருந்தார்கள்.
619.
குங்குமத் தடந்தோள்
வள்ளல் குறித்திடுங் கருத்தி னூடு
செங்கயல் வரிக்கட்
செவ்வாய்த் திருந்திழை கதிசா வென்னு
மங்கைதன் பெயருஞ்
சித்திர வடிவுநின் றுலவ மாறாப்
பொங்கறி வதனான்
மூடிப் புந்தியின் மறைப்ப தானார்.
23
(இ-ள்)
அவ்வாறு சம்மதித்திருந்த குங்கும மாலையணிந்த மலைபோலும் புயங்களையுடைய வரையாது கொடுக்கும்
வள்ளலான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் குறித்திடுங் கருத்தினது மத்தியில் சிவந்த
கெண்டைமீன் போலும் இரேகைகள் படர்ந்த கண்களையும் செம்மை தங்கிய வாயினையும் திருந்திய
ஆபரணங்களையுமுடைய கதீஜாவென்று சொல்லும் மங்கையானவரின் நாமமும் அழகிய சொரூபமும் நின்று உலாவ,
அவையை மாறாத தங்களது மிகுத்த அறிவினால் மூடிப் புத்தியின் கண் மறைவு செய்ய ஆரம்பித்தார்கள்.
620.
மம்மரை மனத்துள்
ளாக்கி முகம்மது கதிசா வென்னும்
பெய்ம்மலர்க்
கொம்பே யன்ன பெண்மனைக் கடையிற் சாரு
மம்மறு கிடத்திற்
போக்கும் வரத்தும தாகி வாசச்
செம்மலர்ச் சுவடு தோன்றாத்
திருவடி நடத்தல் செய்தார்.
24
(இ-ள்)
அவ்வாறு நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் தாங்கள் கொண்ட மயக்கத்தை மனசின்கண்
ஆக்கிக் கதீஜாவென்று சொல்லும் புஷ்பங்களைச் சொரியாநின்ற கொம்பைப் போலும் பெண்ணானவரின்
புறவாயலிற் பொருந்தும் அழகிய வீதியினிடத்துப் போக்கும்
|