பக்கம் எண் :

சீறாப்புராணம்

250


முதற்பாகம்
 

      (இ-ள்) ஆனால் எல்லாவற்றையுங் கற்றுத் தேர்ந்த முன்னோர்களைக் கேட்டும் முதன்மையான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் வேதங்களை யுணர்ந்தும் இப்பூமியின்கண் உம்மை நிகர்த்தவர்களும் இல்லை ஆகையினால் அவ்வரசரான முகம்மதை உம்மிடத்தில் விண்ணப்பஞ் செய்தேன். இலக்குமிக் கொப்பான கதீஜாவானவரே! நீவிர் அவரைக் கூப்பிட்டுப் பாருமென்று சொல்லி நெகிழ்ந்த நெஞ்சினையுடைய அப்பண்டிதன் அக்கதீஜா வென்பவரைப் போற்றிப் புகழ்ந்தான்.

 

630. கலைவலா னுரைத்த மாற்றங் கேட்டபின் கதிசா வென்னுஞ்

    சிலைநுத றெளியத் தேர்ந்தோர் செவ்வியோன் றன்னைக் கூவி

    யலகில்வண் புகழ்சேர் வள்ள லகுமதை யினிதிற் கூட்டித்

    தலைவநீ வருக வென்னத் தாழ்ச்சிசெய் தெழுந்து போந்தான்.

34

      (இ-ள்) அவ்வாறு சாஸ்திர வல்லவனான அப்பண்டிதன் சொல்லிய வார்த்தைகளைக் கதீஜாவென்னும் விற்போன்ற நெற்றியையுடையவர் தமது இருகாதுகளினாலும் கேள்வியுற்ற பின்னர், அவைகளை நன்றாய்த் தெளியும்படி யறிந்து ஏவல் செய்வோனாகிய ஒரு அழகிய புருஷனைக் கூப்பிட்டு ஏவற்றொழிலிற் றலைமையானவனே! நீ போய்க் கனக்கற்ற வளமான கீர்த்தி பொருந்திய வள்ளலாகிய அஹ்மதென்னுந் திருநாமத்தையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை இனிமையோடுமிங்குக் கூட்டிக் கொண்டு வருவாயாக வென்று கட்டளையிட, உடனே அவன் பணிந்து வணங்கி எழும்பி நபிநாயகமவர்கள் இருக்குந் திசையை நோக்கிப் போயினான்.

 

631. ஏவலென் றுரைத்த மாற்ற மிடையறா தொழுகிச் செய்யுங்

    காவல னபித்தா லீபு கடைத்தலை கடந்து சென்று

    பாவலம் பியசெந் நாவார் பன்முறை வழுத்தப் போதா

    மேவலர்க் கரியே றென்னு முகம்மதை யினிதிற் கண்டான்.

35

     (இ-ள்) ஏவுதலென்று சொல்லிய வார்த்தைகளை இடைவிடாது ஒழுங்காய்ச் செய்யாநிற்கு மரசனான அவன், அபீத்தாலிபவர்களின் வீட்டினது முதல் வாசலைத் தாண்டி அகம் பிரவேசித்துப் பாக்களானவை யிருந்தலம்பா நிற்கும் சிவந்த நாவினையுடைய ஆன்றோர்களால் அனேகதடவை கூறினாலுங் கூறமுடியாத சத்துராதிகளாகிய யானைகட்கு ஆண்சிங்கமென்று சொல்லும் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை யினிமையுடன் பார்த்தான்.