பக்கம் எண் :

சீறாப்புராணம்

253


முதற்பாகம்
 

638. மெய்ம்மொழி மறைக டேர்ந்த பண்டிதன் விரைவின் வந்து

    மொழ்மலர்க் கதிசா செவ்வி முழுமதி வதன நோக்கிச்

    செய்தவப் பலனே யன்ன வள்ளலைத் திரும னைக்கே

    யெய்துதற் கருள்செய் வீரென் றெடுத்துரை விரித்துச் சொன்னான்.

42

     (இ-ள்) அப்போது சத்திய வசனங்களையுடைய வேதங்களைக் கற்றுத் தெளிந்த அப் பண்டிதன் சீக்கிரத்தில் அங்கு வந்து வண்டுகளால் மொய்க்கப் பெற்ற மலர்போலும் கதீஜா அவர்களின் அழகிய பூரணச் சந்திரனையொத்த முகத்தை பார்த்துச் செய்யா நின்ற தவத்தினது பிரயோசனத்தை நிகர்த்த வள்ளலாகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களை அவர்களின் தெய்வீகம் பொருந்திய வீட்டின்கண் போய்ச் சேருவதற்குக் கிருபை செய்வீர்களாகவென்று விரிவாக வார்த்தைகளை எடுத்துக் கூறினான்.

 

639. விரும்பிய காம நோயை வெளிவிடா தகத்துள் ளாக்கி

    யரும்பிள முறுவற் செவ்வா யணிமல ரிதழை விண்டே

    யிரும்புகழ் தரித்த வெற்றி முகம்மதை யினிதி னோக்கி

    வரும்பெருந் தவமே நுந்த மனையிடத் தெழுக வென்றார்.

43

      (இ-ள்) கதீஜா அவர்கள் தாங்கள் கருதிய காமமாகிய பிணியை வெளியின்கண் விடாது மனசினுள்ளாக்கிப் பெரிய கீர்த்தியைத் தரித்த வெற்றியையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை இனிமையோடும் பார்த்துத் தங்கள் முல்லை யரும்பு போன்ற சிறிய பற்களையுடைய சிவந்த வாயினது அழகிய பூப்போலும் அதரங்களைத் திறந்து இவ்வுலகத்தின்கண் வராநிற்கும் பெரிய தவமானவர்களே! உங்களது வீட்டின்கண் எழுந்தருளுங்களென்று சொன்னார்கள்.

 

640. காக்குதற் குதித்த வள்ளல் காரிகை வடிவைக் கண்ணா

    னோக்கியு நோக்கா தும்போ னொடியினி லெழுந்தும் மாதின்

    மாக்கட லனைய கண்ணு மனமும்பின் றொடர்ந்து செல்லக்

    கோக்குல வீதி நீந்திக் கொழுமனை யிடத்திற் சார்ந்தார்.

44

     (இ-ள்) அப்பொழுது அகில சராசரங்களையும் இரட்சித்தற்கு தையமாகிய வள்ளலான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் காரிகையாகிய கதீஜா நாயகமவர்களின் அழகைத் தங்கள் கண்களினாற் பார்த்தும் பார்க்காத்தைப் போல் ஒருகை நொடிப் பொழுதினில் தாங்களிருந்த ஆசனத்தை விட்டும் எழும்பி அந்தக் கதீஜா அவர்களின் பெரிய சமுத்திரம் போன்ற கண்களும் மனசும் தங்களின் பின்னே தொடர்ந்து வரும்படி நடந்து அரசர் குழாத்தையுடைய தெருக்களைக் கடந்து தங்களது செழிய வீட்டின்கண் போய்ச் சேர்ந்தார்கள்.