|
முதற்பாகம்
641.
மடங்கலே றனைய செம்மன்
மனையில்வந் திருந்த போழ்தே
படங்கொள்பூ தலத்தி
ராச பதவியும் பெரிய வாழ்வு
மிடங்கொள்வா னகத்தின்
பேறு மெளிதினி னும்பாற் செல்வ
மடங்கலு மடைந்த தின்றென்
றறைந்துபண் டிதன கன்றான்.
45
(இ-ள்)
பின்னர் அப்பண்டிதனானவன் ஆண் சிங்கம் போன்ற செம்மலாகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்கள் இன்றையத்தினம் உமது வீட்டின்கண் எழுந்தருளி வந்திருந்த போதே ஆதிசேடனது படாமகுடங்களிற்
கொண்ட இந்தப் பூலோகத்தின் கண்ணுள்ள இராசபதவியும் பெரிதான வாழ்க்கையும் விசாலங்கொண்ட
இடத்தினையுடைய வான லோகத்தின் பேறும் மற்றுஞ் செல்வ முதலிய யாவும் உமது பால் இலேசாக வந்து
சேர்ந்தனவென்று கதீஜா அவர்களோடுஞ் சொல்லி விட்டு அவ்விடத்தை விட்டும் நீங்கிப் போய்
விட்டான்.
642.
தெரிந்துணர்ந் தறிந்தோர்
மாற்றஞ் சிறிதெனும் பழுது வாரா
விரிந்தநூ லுரையும்
பொய்யா விளங்கொளிர் வடிவ தாக
விருந்தவர் நபியே
யாமு மிவர்மனை வியரே யென்னக்
கருந்தடங் கண்ணா
ருள்ளக் கருத்தினி லிருத்தல் செய்தார்.
46
(இ-ள்)
அவன் அவ்வாறு போகவே, கரிய நிறங்கொண்ட விசாலம் பொருந்திய கண்களையுடையவர்களான கதீஜா
அவர்கள் யாவையுந் தெரிந்தறிந்து உணர்ந்தவர்களாகிய மேலோர்களின் வார்த்தைகள் கொஞ்சமேனும்
குற்றம்வராது. அன்றியும், விரிவுற்ற வேத சாஸ்திரங்களும் பொய்யாகாது. ஆதலால் ஒளிரா நின்ற
பிரகாசத்தினது சொரூபமாக இங்கு எழுந்தருளி வந்திருந்தவர்கள் நபிதான். நாமும் இத் நபியவர்களின்
நாயகியர் தானென்று மனசினது கருத்தில் இருக்கும்படி செய்தார்கள்.
643.
படியினிற் சசியுஞ்
செங்கேழ் பருதியு நிகரொவ் வாத
வடிவெடுத் தனைய
வள்ளன் முகம்மதி னெஞ்ச மென்னுங்
கடிகமழ் வாவி யூடு
கருத்தெனும் கமல நாப்பண்
பிடிநடைக் கதிசா வென்னும்
பெடையன முறைந்த தன்றே.
47
(இ-ள்)
மேலும் இப்பூலோகத்தின்கண் சந்திரனும் சிவந்த பிரகாசத்தையுடைய சூரியனும் உவமையிற் பொருந்தாத
சொரூபமெடுத்தாற் போன்ற வள்ளலாகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகி வசல்லமவர்களின் மனமென்னும்
வாசனை பரிமளியா நின்ற தடாகத்தினது மத்தியில் கருத்தென்னுந் தாமரைமலரின் நடுவில் பெண்யானை
போலும் நடையினையுடைய கதீஜாவென்னும் பெட்டை யன்னமானது வீறுடனிருந்தது.
|