முதற்பாகம்
(இ-ள்)
அவ்விதம் யாவர்களுங் களிப்படைந்து சென்ற அக்கானகத்தில் தூசிகளானவை நெருக்கமுற்று
ஆகாயத்தைச் சீத்திடும்படி நிகழ்கின்ற நெடுந்தூரம் போனதின் பின்னர்க் குதிக்கா நிற்கும்
ஒரு மனிதனானவன் ஆங்குவந்து சேர்ந்தான்.
710. கையோடிரு
காலு நடுங்கிடவே
மெய்யோடிய
வேர்வைகள் சிந்திவிழ
அய்யோவிதி
யோவென வாயலறி
யுய்வாறினி
யேதென வோதினனே.
11
(இ-ள்)
அவ்வாறு வந்து சேர்ந்த அம்மனிதனானவன் இரண்டு கைகளுடன் இரண்டு கால்களும் நடுக்கமடையவும், சரீரத்தின்கண் ஓட்டமுற்ற சுவேத நீர்த்துளிகள் சிதறிப் பூமியின் மீது விழவும், வாயினால்
ஐயோ? விதியோ? வென்றுகூறி யொலித்து இனிமேல் பிழைக்கும்வழி யாதென்று சொல்லினான்.
711. மயமாறிட
வாய்குழ றிக்குழறித்
துயரோடுற
வந்து சுழன்றவனை
வயவீரர்கள்
கண்டுன் மனத்திலுறும்
பயமேதுகொ
லென்று பகர்ந்தனரே.
12
(இ-ள்)
அவ்விதம் தனது சரீரத்தின்கண் தங்கிய அழகானதும் நீங்கிடும்படி வாயானது பேசுதற்கேலாது குழறிக்
குழறித் துன்பத்துடன் பொருந்தும்வண்ணம் வந்து சுழற்சியுற்ற அம்மனிதனை அங்குள்ள வெற்றியையுடைய
வீரர்களான யாத்திரைக்காரர்களனைவரும் பார்த்து உனது மனத்தின்கண் தங்கிய பயங்கரம் யாது?
அதைச் சொல்லுவாயாகவென்று கேட்டார்கள்.
712. சினமுண்ட
செழுங்கதிர் வேலுடையீர்
வனமுண்டரை
நாழிகை யுள்வழியிற்
கனமுண்டொரு
காரண மாமலையி
னினமுண்டு
பருத்தெழு கின்றதுபோல்.
13
(இ-ள்)
அவ்வாறு கேட்க, அம்மனிதனானவன் சினத்தையுண்ட செழிய பிரகாசந் தங்கிய வேற்படையையுடைய
வியாபாரிகளே! இன்னம் அரைநாழிகை வழியினகம் ஒரு காடுண்டு. அக்காட்டில் பாரமான ஒரு
காரணமுண்டு. அதென்னவென்றால் பெரிய பருவதங்களின் கூட்டங்களைச் சாப்பிட்டுப் பருப்பமுற்று
எழும்புகின்றதைப் போல.
713. அரவொன்றுள
தத்திரி யும்பரியுங்
கரமொன்று
கரித்திர ளுமெதிரே
வரவுண்டிடும்
வாறலை நீளமதை
யுரமொன்றி
யுரைத்திட நாவரிதே.
14
|