பக்கம் எண் :

சீறாப்புராணம்

373


முதற்பாகம்
 

972. சரிந்து வீழ்ந்திடச் சிதறிய செங்கதிர்த் தழல்கள்

    விரிந்து நன்கதிர் குலவிய முகம்மது மெய்யி

    னெரிந்த சந்தனச் சேறுபன் னீரொடுங் குழைத்துச்

    சொரிந்த தாமெனக் குளிர்ந்தது சோர்வற வன்றே.

6

     (இ-ள்) அவ்விதம் அக்கொல்லனால் அடிக்கப்பட்டு நானா பக்கங்களிலும் சாய்ந்து விழும்படி சிதறுதலுற்ற செவந்த பிரகாசத்தையுடைய அந்நெருப்புப் பொறிகள் பரப்பாகிய நல்ல கிரணங்கள் ஒளிரப் பெற்ற நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் திருமேனியின்கண் பனிநீருடன் நசிதலடைந்த சந்தனக் குழம்பையும் ஒன்றாய்க் கலந்து பொழிந்ததைப் போலத் தளர்ச்சியான தற்றுப்போகும் வண்ணம் குளிர்ச்சியுற்றது.

 

973. இத்தி றத்தெழில் கண்டுகம் மியனெதிர் நோக்கி

    யுத்த மக்குலப் பெயர்தலை முறைப்பெய ரூர்ப்பேர்

    பத்தி யின்னுமக் கிடுபெய ரிவைபடிப் படியா

    வித்த காதெரி தரவுரை யெனவிளம் பினனே.

7

     (இ-ள்) அப்போது அந்தக் கொல்லனானவன் இந்தத் தன்மையையுடைய அழகிய காரணத்தைத் தனது இருகண்களினாலும் பார்த்து நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை எதிராக நோக்கி அறிஞ ரானவர்களே! மேன்மையையுடைய தங்களது குடும்பத்தின் பெயர் தங்கள் தலைமுறையின் பெயர் ஊரினது பெயர் வரிசையாகத் தங்களுக்கிட்ட பெயராகிய இவைகளைத் தரந்தரமாக எனக்குத் தெரியும் வண்ணஞ் சொல்லுங்களென்று கேட்டான்.

 

974. மக்க மூர்கிலா பருள்குசை யப்துல்மு னாபுக்

    கக்க மானவா சீமுத லப்துல்முத் தலிபு

    தக்க மன்னவன் மைந்தரி லப்துல்லா தவத்தான்

    மிக்க னென்பெயர் முகம்மது வெனவிளம் பினரே.

8

     (இ-ள்) அக்கொல்லா னானவன் அவ்வாறு கேட்க, அதைக் கேட்ட நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் எனது ஊர் திருமக்கமாநகரம் கிலாபென்பவ ரருளிய குசையுடைய மகன் அப்துல் முனாபுக்குக் கண்மணியான ஹாஷிமின் முதன்மையான அப்துல் முத்தலிபாகிய தகுதியுற்ற அரசரவர்களின் மக்களில் அப்துல்லா வென்பவருடைய தவத்தினால் பெருமையிற் சிறந்தவனான என் பெயர் முகம்மதென்று சொன்னார்கள்.