பக்கம் எண் :

சீறாப்புராணம்

374


முதற்பாகம்
 

975. அறபின் மக்கமா நகரினின் முகம்மதென் றணித்தா

    யுறவு தித்துநஞ் சமயங்க ளுலைப்பனென் றுரவோர்

    மறையி லோதிய வரன்முறைப் படியஃ துணர்கிற்

    குறைவி லாதவ னிவனெனக் குறித்துளங் கொதித்தான்.

9

     (இ-ள்) நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்விதம் சொல்லிய வார்த்தைகளை அந்தக் கொல்லனானவன் கேள்வியுற்று அறபு தேசத்திலுள்ள பெருமை பொருந்திய மக்கமா நகரத்தில் சமீபமாக முகம்மதென்னு மொருவன் பொருந்தும்படி பிரசன்னமாகி வந்து நமது மார்க்க முதலியவற்றை இல்லாமற் செய்வானென்று அறிஞர்கள் வேதங்களினால் தெளிந்து சொல்லிய வரலாற்றின்படி அஃதை நாம் உணர்ந்து பார்த்தால் அந்தக் குற்றமற்ற முகம்மதென்பவன் இவன் தானென்று மதித்து மனக்கொதிப்படைந்தான்.

 

976. வருந்தி லாமறை யவர்களே சாமின்மன் னவரே

    திருந்து நல்லறி வாளரே தேவத மனைத்தும்

    பொருந்து றாதற வழித்திட நகரிடைப் புகுந்திங்

    கிருந்த வனிவன் காணெனக் கூக்குர லிட்டான்.

10

     (இ-ள்) அன்றியும், வருத்தமில்லாத வேதங்களைக் கற்றுத் தெளிந்த பண்டிதர்களே! இந்த ஷாமிராஜியத்தினது அரசர்களே! திருந்தா நிற்கும் நன்மை பொருந்திய அறிவினையுடையவர்களே! நமது தேவதங்களெல்லாம் பொருந்தாது முழுவதையும் அழித்திடும்படி இவ்வூரின்கண் நுழைந்து இங்கு தங்கியிருந்தவன் இவன்தான் பாருங்களென்று சொல்லிக் கூச்சல் போட்டான்.

 

தாழிசை

 

977. கனைவாருதி நிகர்சாமுறை கதிர்மாமுடி வீரர்

    தனுவாளயி லெறிவேல்கணை தண்டம்பல வேந்தி

    முனையாரெவ ரெதிர்வார்முறை யிடுவாரெவ ரென்றே

    சினமாயெழு புலிபோல்பவர் சிலர்வந்துவ ளைந்தார்.

11

     (இ-ள்) அக்கூச்சல் சத்தத்தைக் கேட்ட அந்த ஷாம்நகரத்தில் தங்கிய ஒலிக்குகின்ற சமுத்திரத்தைப் போன்ற பிரகாசத்தையுடைய பெருமையுற்ற கிரீடங்களைத் தரித்திருக்கு யுத்த வீரர்களில் கோபமாய் எழாநின்ற வேங்கை போல்பவராகிய சிலபேர்கள் வில்-வாள் எறியா நிற்கும் வேல்-அம்பு-தண்ட முதலிய பல ஆயுதங்களைத் தாங்கிப் பகைஞர் யாவர்? நம்மை எதிர்ப்பவர் யாவர்? முறையிடுகிறவர் யாவர்? என்று சொல்லிக் கொண்டு அங்கு வந்து சூழ்ந்தார்கள்.