பக்கம் எண் :

சீறாப்புராணம்

380


முதற்பாகம்
 

991. அம்புய வதனன் குவைலிது வருந்து

        மருந்தவந் திரண்டொரு வடிவாய்க்

    கொம்பென வொசிந்த நுண்ணிடைக் கதீசா

        குறித்திடுக் கனவினைத் தேர்ந்து

    கம்பிதஞ் செய்து கருத்தினுண் மகிழ்ந்து

         காரணப் புதுமைக ளனைத்து

    மிம்பரின் விளங்க மைசறா மகிழ

         வினிதுற வெடுத்திசைத் திடுவான்.

25

     (இ-ள்) அதைக் கேட்ட அவ்வூசாவென்னும் பண்டிதன் தாமரை மலர்போலு முகத்தையுடையவனான குவைலீ தென்பவன் வருந்திச் செய்யா நிற்கும் அரிய தவமானது திரட்சியுற்ற ஒப்பற்ற சொரூபமாய்ப் பூங்கொம்பு போலும் துவளாநின்ற நுண்ணிய இடையினையுடைய கதீஜா நாயகமவர்கள், தங்களது மனசின்கண் மதித்திடும் சொப்பனத்தை உள்ளத்தில் தெளிந்துச் சிரக்கம்பிதஞ் செய்து சிந்தையில் மகிழ்ச்சி கொண்டு இவ்வுலகத்தி னிடத்தில் காரணத்தையுடைய அற்புதங்களெல்லாம் விளங்கும்படி யாகவும் மைசறாவென்பவன் மனமகிழ்ச்சி யடையும்படி யாகவும் இனிமையுறும் வண்ணம் எடுத்துச் சொல்லுவான்.

 

992. அகிலமுந் திசையுஞ் சுவனமும் விளங்க

        வணிதிகழ் மக்கமா நகரின்

    முகம்மதென் றுதித்துத் தீன்பயி ரேற்றி

        மறைவழி தவறிடா நடத்திப்

    பகரரு நபியாய் வேதமு முடைத்தாய்

        வருவரென் றறிவுளோர் பகர்ந்த

    நிகரருங் குரிசி லிவரல் லா லிந்த

        நீணிலத் தினிலிலை யெனவும்

26

     (இ-ள்) பூலோகமும் சுவர்க்கலோகமும் அங்குள்ள எண்டிசைகளும் விளங்கும்படி அழகானது பிரகாசியா நிற்கும் திருமக்கமா நகரத்தில் முகம்மதென் றொருவர் பிரசன்னமாகி இவ்வுலகத்தின்கண் தீனுல்லிஸ்லாமென்னும் ஓர் மார்க்கப்பயிரை யேற்றி யாவர்களையும் வேத ஒழுங்கு தவறாது நடத்திச் சொல்லுதற்கரிய நபியாயும் புறுக்கானுல் அலீமென்னும் வேதத்திற்குச் சொந்தமாயும் வருவாரென்று முன்னுள்ள புத்திசாலிகள் சொல்லிய ஒப்பில்லாத பெருமையிற் சிறந்தவர் இந்த நீட்சியுற்ற பூமியினிடத்தில் இதோ இருக்கிற முகம்மதே யல்லாமல் வேறேயொருவரு மில்லரென்றும்.