பக்கம் எண் :

சீறாப்புராணம்

387


முதற்பாகம்
 

நிற்கும் தாழை மரங்கள் ஒரு பக்கம், மிகுதியாக மெல்லிய கனிகளைச் சிந்தா நிற்கும் முட்களையுடைய பேரீத்தமரங்கள் தங்களது குறுகிய கழுத்துக்களை அசைகிறவை ஒரு பக்கம், கமுக மரங்கள் வெள்ளிப் பிடியினையுடைய வெண்ணிறத்தைக் கொண்ட சாமரங்கள் விரிந்தாற்போலும் பாளைகளை விரித்துத் தங்களது கழுத்துகளை அசைகிறவை ஒருபக்கம், தெள்ளிய ஜலத்தினையுடைய குரும்பையினது கூட்டங்களையுடைய பலகுலைகளைத் தாங்கிய நெருங்கித் திரட்சியுற்ற தென்னமரங்கள் ஒரு பக்கம்.

 

1005. தூய்திரட் பளிக்குக் கனியையா மலகஞ்

        சொரிதரச் சிதறுவ வொருபாற்

     காய்கதிர் நீல மணியென நாவற்

        கருங்கனி சிதறுவ வொருபாற்

     சேயுயர் தேமாச் செழுந்தலை குழைத்துத்

        தீங்கனி யுகுவன வொருபாற்

     சாய்பணர்க் கொழுவிஞ் சியின்கனி சிவந்த

        தனமெனச் சொரிவன வொருபால்.

9

     (இ-ள்) அன்றியும், நெல்லிமரங்கள் பரிசுத்தமான திரட்சியையுடைய பளிங்குக்கற்கள் போன்ற கனிகளைச் சொரியும்படி சிதறுகிறவை ஒரு பக்கம், நாவல்மரங்கள் காய்ந்த கிரணங்களையுடைய நீலரத்தினத்தைப் போன்ற கரிய கனிகளைச் சிதறுகிறவை ஒரு பக்கம், உயர்ச்சியுற்ற தேமாமரங்கள் தங்களது செழிய தழைகளைக் குழையச் செய்துச் சிவந்த இனிமையான கனிகளைச் சிதறுகிறவை ஒரு பக்கம், சாய்ந்த பணர்களையுடைய கொழுவிஞ்சி மரங்களின் கனிகள் சிவந்த பொன்னைப் போலச் சிதறுகிறவை ஒரு பக்கம்.

 

1006. தேங்குட மனைய முட்புறக் கனிக

         டிகழ்தரச் செறிந்தன வொருபான்

     மாங்கனி யமுதத் திவலைக டெறிப்ப

         மலிதரச் சொரிவன வொருபாற்

     பூங்குலைக் கூன்காய் பொன்பழுத் தொளிர்வ

         போன்றன கதலிக ளொருபாற்

     றீங்கில்பொற் கலசம் விண்டுசெம் மணிகள்

         சிந்துமா துளைத்திர ளொருபால்.

10

     (இ-ள்) அன்றியும், பலாமரங்களின் முட்களையுடைய கனிகள் தேன்குடத்தைப் போலும் பிரகாசிக்கும்படி நெருங்கியவைகள் ஒரு பக்கம், மாமரத்தினது கனிகள் அமுதத் துளிகளைத் தெறிக்கும் வண்ணம் அதிகரித்துச் சிந்துகிறவைகள்