பக்கம் எண் :

சீறாப்புராணம்

411


முதற்பாகம்
 

      (இ-ள்) அவ்விதம் சந்தோஷமடைந்த நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் பொன்னினாலான வளையல்களைத் தரித்த கதீஜா நாயகமவர்களின் திருவடிகளைத் துதியா நிற்கும் மைசறாவென்பவன் சொல்லிய சொல்லினது விஜயத்தையும், குவைலிதென்று சொல்லும் மன்னவனுக்கு உறக்கத்தாகிய வேதபண்டிதன் சொல்லிய தன்மையினால் அவன் மகிழ்ச்சி கொண்ட வரலாற்றையும் பெருமை பொருந்திய சொப்பனத்தினால் அவ்விடத்தில் சேர்ந்தவைகள் எல்லாவற்றையும் தங்களினது பெரிய பிதாவாகிய அபீத்தாலிபவர்களுக்குச் சொல்லுவதற்கு மனசின்கண் நினைத்தார்கள்.

 

1067. அணிநிரைத் தெதிர்ந்த வொன்னா ராருயிர் சிதைத்துச் சேந்து

     திணிசுடர் விரிக்கும் வேற்கைத் திறலபித் தாலிப் தன்பாற்

     பணிமறா தொழுகிச் செய்யும் பாலகன் மைச றாவை

     மணிவகுத் தனைய திண்டோண் முகம்மது கூட்டிச் சென்றார்.

34 

     (இ-ள்) அவ்வாறு நினைத்த இரத்தினவர்க்கங்களை வகைப்படுத்தியதைப் போன்ற திண்ணிய புஜங்களையுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் சேனைகளை வரிசையாக நிறுத்திக் கொண்டு எதிர்த்த சத்துராதிகளின் சரீரத்தின்கண் நிறைந்த ஆவியைச் சிதையும்படி செய்து சிவந்த வலிமையினையுடைய பிரகாசத்தை நானாபக்கங்களிலும் பரவாநிற்கும் வேலாயுதந்தாங்கிய கையினது வீரத்தையுடைய அபீத்தாலிபவர்களினிடத்தில் இட்ட ஏவற்பணிகளை மறுக்காது செய்யாநின்ற பாலகனாகிய அம்மைசறாவென்பவனைக் கூட்டிக் கொண்டு போயினார்கள்.

 

1068. தந்தைமாட் டேகி யங்ஙன் சார்பிட மறிந்து சார்ந்து

     நந்தமர் தனிலு மிக்க நண்பின னிவனென் றோதி

     மந்திர மொழியா யேதோ வாசக முளதென் றான்றன்

     சிந்தையை விளக்க மாகக் கேளுதி தெரிய வென்றார்.

35

     (இ-ள்) அவ்விதம் போன நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தங்களின் பெரிய தந்தையாகிய அபீத்தாலிபவர்களின் சந்நிதானத்திற் போய் அங்கு சாரக்கூடிய இடத்தையுணர்ந்து சார்ந்து மைசறாவென்பவனைச் சுட்டி இவன் நமது பந்துக்களிலும் மிகுத்த உறவினையுடையவனென்று சொல்லி வேத வார்த்தைகளாக யாதோ சமாச்சார முண்டுமென்று சொன்னான். ஆதலால் அவனது கருத்தைத் தாங்கள் தெளிவாய்த் தெரியும் வண்ணம் கேளுங்களென்று சொன்னார்கள்.