பக்கம் எண் :

சீறாப்புராணம்

413


முதற்பாகம்
 

நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களையும் துதித்துத் தனது நீண்ட தாமரை மலரை நிகர்த்த இருகைகளையுங் குவித்து வணங்கிவிட்டுத் தனது வீட்டின்கண் போய்ச் சேர்ந்தான்.

 

1072. அயர்விலா துரைத்த சொற்கேட் டருளுறை யபித்தா லீபு

     புயவரை பூரித் தோங்கிப் பொருவிலப் பாசா ரீது

     வயவரி யமுசா வீறா மன்னுசோ தரரை யெல்லா

     நயனுற வழைத்தி ருத்தி நடந்தசொல் லனைத்துஞ் சொன்னார்.

39

     (இ-ள்) அப்போது மைசறாவென்பவன் தளர்வில்லாது உரைத்த வார்த்தைகளைக் கிருபை தங்கிய அபீத்தாலிபவர்கள் தங்களிருகாதுகளினாலுங் கேள்வியுற்றுத் தோள்களாகிய இரண்டு மலைகளும் பருக்கப் பெற்று வளர்ந்து ஒப்பில்லாத வேங்கையை நிகர்த்த அப்பாசு, ஆரிது, ஹமுசா கடைசியாகப் பொருந்திய தங்களின் சகோதரர்க ளனைவர்களையும் நன்மையுறும் வண்ணம் கூப்பிட்டு வீட்டின்கண் இருக்கும்படிசெய்து நடந்தவர்த்தமானங்க ளெல்லாவற்றையும் சொன்னார்கள்.

 

1073. பாட்டளி மிழற்றுந் தேறற் படலைவீற் றிருந்த வீரத்

     தோட்டுணை யபூத்தா லீபு சுடர்நகை முறுவல் வாயாற்

     கேட்டசொல் லமிர்தந் தன்னாற் கேகய முகில்கண் டென்னப்

     பூட்டிய சிலைக்கை வீரர் பொன்றிலா மகிழ்ச்சி பூத்தார்.

40

     (இ-ள்) தேனீக்கள் இசைப்பாட்டுப் பாடா நிற்கும் மதுவைக் கொண்ட புஷ்பமாலைகள் மாறாது வீறுடனிருக்கப்பெற்ற வீரமமைந்த இருபுயங்களையுடைய அபீத்தாலிபவர்களின் ஒள்ளிய பிரகாசம் தங்கிய பற்கள் பொருந்திய வாயினால் கேள்வியுற்ற சொல்லாகிய அமுதத்தால் மயில்களானவை மேகத்தைக் கண்டாற்போல நாணினால் வளைத்துப் பூட்டப்பட்ட கோதண்டந்தாங்கிய கையினையுடைய வீரர்களான அப்பாசு முதலிய அவர்களியாவர்களும் அழியாத மகிழ்ச்சி யுண்டானார்கள்.

 

1074. உடைமையிற் பணத்திற் சாதி யுயர்ச்சியில் வணக்கந் தன்னின்

     மடமயி லழகி லொவ்வா மாட்சியிற் கதீசா தன்னைக்

     கடிமண முடிக்க நாடிக் கருதின பேர்க ளெல்லா

     மடிகளென் றுரைநா நீட்ட வச்சமுற் றிருந்தா ரன்றே.

41

     (இ-ள்) பாக்கியத்தினாலும் திரவியத்தினாலும் சாதியினது மேன்மையினாலும் தெய்வ வணக்கத்தினாலும் அழகிய யாவரும் ஒப்பாகாத மாட்சிமையினையுடைய இளமயிலாகிய அந்தக் கதீஜாநாயகமவர்களை இன்பத்தைப் பெற்ற விவாக முடிக்கும்படி விருப்பங் கொண்டு எண்ணிய ஜனங்களெல்லாவரும் அவர்களைத்