பக்கம் எண் :

சீறாப்புராணம்

439


முதற்பாகம்
 

கலிவிருத்தம்

 

1137. கானறு மல்லிகை கமல மெல்லிதழ்ப்

     பூநறும் பாயலி னடந்து பொங்கொளி

     தேனறுந் தெரியலார் செம்பொ னாட்டுறை

     வானவர் வாழ்த்திட வாசி மேற்கொண்டார்.

41

     (இ-ள்) அவ்விதமெழுந்த ஓங்காநிற்கும் பிரகாசமுற்ற தேனமைந்த சுகந்த மாலையை யுடையவர்களான நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் வாசனையையுடைய நறிய மல்லிகைப் புஷ்பத்தினாலும் மெல்லிய இதழ்களை யுடைய தாமரைப் புஷ்பத்தினாலுமான பரிமளத்தைப் பெற்ற பாயலின்கண் தங்களிரு பாதங்களினாலும் நடத்தலைச் செய்து சிவந்த பொன்னுலகத்தில் வாசஞ்செய்யா நின்ற தேவர்களான மலாயிக்கத்துமார்கள் சோபனம் சொல்லும்படி குதிரையின் மீதேறினார்கள்.

 

1138. முறைமுறை தண்ணுமை முருடு துந்துமி

     சிறுபறை சல்லரி பதலை திண்டிம

     மறுவறு பேரிகை முரசு மத்தளி

     யறைதிரைக் கடலொலி யடங்க வார்த்தவே

42

     (இ-ள்) அப்பொழுது குற்றமற்ற தண்ணுமை, முருடு, துந்துமி, சிறுபறை, சல்லரி, பதலை, திண்டிமம், பேரிகை, முரசு, மத்தளமாகிய இவைகள் ஒலியாநிற்கும் அலைகளையுடைய சமுத்திரத்தினது ஓசையானது அடங்கும் வண்ணம் வரிசை வரிசையாய் ஒலித்தன.

 

1139. பெருகிய கடன்முகட் டெழுந்த பேரொளிப்

     பரிதியொத் திருந்தன குரிசில் பான்மைமேல்

     விரிதரு மதியெனக் கவிகை வெண்ணிலாச்

     சொரிவன கற்றையங் கவரி தூங்கின.

43

     (இ-ள்) அந்நேரத்தில் குரிசிலாகிய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களினது தன்மையும் அவர்களின் மீது விரிந்த சந்திரனைப் போன்ற குடையானது வெள்ளிய பிரகாசத்தைச் சிந்துவதும், மயிர்க்கற்றைகளை யுடைய அழகிய சாமரங்கள் அசைவதும் பெருகிய சமுத்திரத்தின் உச்சியில் எழா நின்ற பெரிய பிரகாசத்தையுடைய சோமனை நிகர்த்திருந்தன.

 

1140. அவிரொளிக் கொடிமிடைந் தடர வண்ணலார்

     பவுரியி னடுமுறைப் பணில மார்த்தெழக்

     குவிகைகொம் புகள்குமு குமெனப் பல்லியஞ்

     செவியடைத் தனதெருத் தலைக ளெங்குமே.

44