பக்கம் எண் :

சீறாப்புராணம்

442


முதற்பாகம்
 

     (இ-ள்) அன்றியும், செழிய மேகக் குடையையுடைய அழகிய செம்மலான நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் தெருக்களினிடத்துக் குற்றமற்ற பவனியாய் வருகின்றார்களென்று ஏழுவகைப்பட்ட பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் கடைசியாக தங்களது கூட்டத்தோடும் திசைகளெல்லாவற்றிலும் நிறைவுற்றுக் கூடினார்கள்.

 

1148. மணிப்பளிக் கறைநிலை மாட மீதினுங்

     குணிப்பருங் கூடகோ புரத்து மீதினும்

     பணிப்பரு மேனிலைப் பரப்பு மீதினுந்

     தணிப்பிலா துயர்ந்தமண் டபத்தின் சார்பினும்

52

      (இ-ள்) அழகிய பளிங்கறைகளையுற்ற நிலைகளையுடைய மாடங்களின் மேலும், குணித்தற்கரிய கூட கோபுரங்களின் மேலும், செய்வதற்கு அருமையான மேனிலைகளைக் கொண்ட பரப்புகளின் மேலும், தணிவில்லாது உயரப் பெற்ற மண்டபங்களின் பக்கங்களிலும்.

 

1149. சச்சையின் முகப்பினுஞ் சாள ரத்தினும்

     வச்சிர மழுத்திய வாயின் மீதினுங்

     கச்சணி முலைச்சியர் கதிர்கொண் மால்வரைப்

     பச்சையங் கிளியெனப் பரந்து தோன்றினார்.

53

      (இ-ள்) சச்சைகளின் முகப்புகளிலும், சாளரங்களிலும், வச்சிரக்கற்க ளழுத்தப்பட்ட வாயில்களின் மீதிலும், பிரகாசத்தைக் கொண்ட பெரிய மலையின் அழகிய பச்சை நிறத்தையுடைய கிளிகளைப் போல இரவிக்கை தரித்த முலைகளை யுடையவர்களான பெண்கள் பரவி விளக்கமுற்றார்கள்.

 

1150. வெண்முகிற் கவிகையிற் பிறந்த மின்னென

     வண்ணமென் பசுங்கதிர்த் தோகை மஞ்ஞைகள்

     கண்ணினக் கவிகையைக் கண்டு வந்தென

     வெண்ணிறந் தனையமா மாத ரீண்டினார்.

54

      (இ-ள்) வெண்ணிறம் கொண்ட மேகத்தைப் போன்ற குடைகளினின்று முதயமான மின்னலென்று சொல்லித் தங்களின் கண்களினால் அக்குடைகளைப் பார்த்து மெல்லிய பசிய கிரணங்களையுடைய அழகிய சிறகுகளைப் பெற்ற மயில்கள் வந்ததைப் போல அளவில்லாத பெருமை பொருந்திய அம்மயில் போலும் சாயலையுடைய பெண்கள் வந்து கூடினார்கள்.