பக்கம் எண் :

சீறாப்புராணம்

444


முதற்பாகம்
 

1154. கடுநடைப் புரவி மேலாய்க் கவிகைமா னிழற்ற வந்த

     வடிவுறை முகம்ம தின்றன் வனப்பலால் வனப்பு மில்லைக்

     கொடியிடைக் கதீசா வென்னுங் கொம்புசெய் தவப்பே றாகப்

     பிடிநடை யவரிற் பேறு பெற்றவ ரில்லை யென்பார்.

58

      (இ-ள்) அன்றியும், கடிய நடையையுடைய குதிரையின் மேலாய் மேகங்கள் குடையினது நிழலைச் செய்யும் வண்ணம் வரப்பெற்ற அழகுதங்கிய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் அழகேயல்லாமல் வேறேயொரு அழகுமில்லை. மேலும் கொடிபோலும் இடையையுடைய கதீஜா நாயகியென்னும் பூங்கொம்பானவர்கள் இயற்றிய தவத்தினது பேறாய்ப் பேறு பெற்றவர்கள் பெண்யானை போலும் நடையையுடையவர்களான பெண்களில் ஒருவரும் இல்லரென்று சொல்லுவார்கள்.

 

1155. பொன்னெனப் பூங்கொம் பென்ன மணியெனப் பொருந்து மாதர்

     மின்னொளி கரக்குஞ் சோதி மெய்யெழின் முகம்ம தென்னு

     மன்னினைக் கதீசா செல்வ மனைமண முடித்த போதே

     யெந்நிலப் பொருளும் வாழ்வு மிவர்க்கினி யெய்து மென்பார்.

59

      (இ-ள்) அன்றியும், இலக்குமியைப் போலவும் பூங்கொம்பைப் போலவும் இரத்தினமணியைப் போலவும் பொருந்தா நிற்கும் பெண்களானவர்கள் மின்னலினது பிரகாசத்தைக் கரக்காநின்ற ஒளியையுடைய சரீரத்தினது அழகைக் கொண்ட நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமென்னும் அரசரானவர்கள் கதீஜா நாயகியவர்களை அவர்களின் செல்வம் பொருந்திய வீட்டின்கண் வைத்து விவாகமுடித்தபோதே இந்தக் கதீஜா நாயகியவர்களுக்கு இனி எல்லா நிலங்களிலுமுள்ள பொருள்களும் வாழ்வும் வந்து சேருமென்று சொல்லுவார்கள்.

 

1156. வனைந்தபூ மரவத் திண்டோண் முகம்மதின் வடிவை நோக்கித்

     தினந்தொறும் பசலை பூத்த தையலார் திரண்டு கூடிக்

     கனத்துதைந் தொதுங்கு மாடக் கதிர்நிலா வீதி வாயிற்

     றினந்தொறும் பவனி காணச் செய்தவஞ் செய்வோ மென்பார்.

60

      (இ-ள்) அன்றியும், குங்குமப் புஷ்பத்தினால் அலங்காரஞ் செய்த மலர்மாலையணிந்த திண்ணிய புயங்களையுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் அழகைப் பார்த்து முலைகள் தோறும் பசலை பூக்கப் பெற்ற பெண்கள் ஒருவரோடொருவர் திரட்சியுற்று ஒன்றுகூடி மேகங்கள் நெருங்கி ஒதுங்கா நிற்கும் மாளிகைகளின் கிரணங்களினது