பக்கம் எண் :

சீறாப்புராணம்

458


முதற்பாகம்
 

      (இ-ள்) அன்றியும், சில பெண்கள் தாங்கா நிற்கும் ஸ்தனபாரத்தின் கண்ணுள்ள ஆபரணங்களை யிழப்பார்கள். சில பெண்கள் தங்களின் கூந்தலானது சோரும் வண்ணம் வாட்டமுற்று நிற்பார்கள். சில பெண்கள் பிரகாசத்தைக் கொண்ட சரீரம் தீதலடைவார்கள். சில பெண்கள் அவ்வழகையுண்டு ஆசையாகிய மயக்கத்தைக் கொள்ளுவார்கள்.

 

                   எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

1197. வானவர் மகளி ரின்னண மியம்பி

         மனத்துறு துயருழன் றுலைப்பத்

     தேனிமி ரலங்கற் செழும்புயக் குரிசிற்

         செழுமுகம் பருதிய தென்னக்

     கானமர் குழலார் செவ்வரி வேற்கட்

         கணமெலா நெருஞ்சியை நிகர்ப்பத்

     தானவா ரணமும் பரிகளு மிடையச்

         சுற்றமுந் தழீஇவரப் போந்தார்.

101

      (இ-ள்) தேவமகளிர்களான ஹூறுல்ஈன்கள் இந்தப்படியாக ஒருவருக்கொருவர் பேசி மனத்தின்கண் பொருந்திய துன்பத்தினாற் சுழற்சியுற்று வருந்துதலடைய, வண்டுகள் ஒலியா நிற்கும் மலர்மாலை யணிந்த செழிய தோள்களையுடைய குரிசிலான நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தங்களின் சிவந்த முகமானது சூரியனைப் போலவும், வாசனை தங்கிய, கூந்தலைக் கொண்ட பெண்களின் செந்நிறமமைந்த இரேகைகளையுடைய வேலாயுதம் போன்ற கண்களினது கூட்டங்க ளியாவும் நெருஞ்சிச் செடியின் புஷ்பத்தைப் போலவும், மதத்தைப் பெற்ற யானைகளும் குதிரைகளும் பக்கத்தில் நெருங்கவும், பந்துக்களும் மற்றவர்களும் தங்களைத் தழுவிப் பின்னால் வரவும் பவனிபோயினார்கள்.

 

1198. சலதரக் கவிகை நெடுநிழல் பரப்பச்

        சலதியிற் பல்லியங் கறங்கக்

     குலவிய கொடியுங் கவரியும் விரியக்

         கொலைமதக் களிறுக ணெருங்கப்

     பலகதிப் பரியு மரசரு மிடையப்

         பாவல ரினிதுவாழ்த் தெடுப்பக்

     கலைவலன் குவைலி தினிதலங் கரித்த

         கடைத்தலைக் காவணம் புகுந்தார்.

102

      (இ-ள்) அவ்விதம் போயின நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் மேகக்குடையானது நெடிய நிழலை விரிக்கவும் வாத்தியங்கள் சமுத்திரத்தைப் போல