பக்கம் எண் :

சீறாப்புராணம்

47


முதற்பாகம்
 

(இ-ள்) அன்றியும், அந்த மக்கமா நகரத்தினது கடைவீதியின் தானமானது யானைக் கூட்டத்தையும், குதிரைக் கூட்டத்தையும், பெரிய மலைகளை நிகர்த்த இரதக்கூட்டத்தையும், சிந்துரமெழுதப்பெற்ற இளஞ் சந்திரன் போலும் நல்ல நெற்றியையும் கரிய கூந்தலையும் செந்நிறத்தைக் கொண்ட இரேகைகள் படர்ந்த பெரிய கண்களையுமுடைய மாதர்களின் நெருக்கத்தையும், அங்கு வந்தவர்கள் சிந்தித்த வஸ்துக்களையும், பொருந்திய அமிர்தத்தையும் வகைவகையாய்த் தருவதினால் சங்கநிதி, பதுமநிதி யென்னு மிருநிதிகளையும், அரி சந்தனம் கற்பகம், சந்தனம், பாரிசாதம், மந்தாரமென்னும் இந்திர தருக்களையும் வறியதென்று சொல்லும்படி செழிப்புற்று அவ்விடத்தில் தங்கியிருந்தது.

 

     86. நிரைத்தபைங் கதிரார் மரகத மணியா

            னீணிலாக் கருப்புரத் தகட்டாற்

        பருத்தசங் கினத்தால் வலம்புரிக் குலத்தாற்

            படர்கொடித் திரட்பவ ளத்தால்

        விரித்தவெண் ணுரைபோல் வெண்டுகி லடுக்கால்

             விரைசெறி யம்பரின் றிடரா

     லிரைத்தபே ரொலியாற் பெருங்கட னிகரா

          யிருந்தது கடைத்தெருத் தலையே.

10

      (இ-ள்) அன்றியும், அந்த மக்கமா நகரத்தினது கடைவீதியின் தானமானது வரிசையாகப்பட்ட பசிய பிரகாசம் நிறைந்த மரகதமணியாலும், நீண்ட ஒளிவைக் கொண்ட கருப்புத்தகட்டாலும், பருப்பமுற்ற சங்குகளின் கூட்டத்தாலும், வலம்புரியினது இனத்தாலும் படரா நிற்கும் கொடிகளையுடைய திரண்ட பவளத்தாலும், வெள்ளிய நுரையைப்போலும் விரியச் செய்த வெண்ணிறத்தையுடைய வஸ்திரங்களின் அடுக்காலும், பரிமள மிகுந்த அம்பரின் திடராலும், ஒலிக்கின்ற பெரும் ஓசையாலும், பெரியசமுத்திரத்தை நிகர்த்திருந்தது.

 

     87. பைங்கடற் பிறந்து வணிகர்கை புகுந்த

             பருமணி நித்திலக் குவையுந்

        தங்கிய கிரண வனசமா மணியுந்

             தயங்கொளி வயிரரா சிகளுஞ்

        செங்கதி ரெறிக்கு மிரவியு மமுதச்

             செழுங்கதிர் மதியமு முடுவு

        மிங்கிவண் குடிபுக் கிருந்தது போன்று

             மிருந்தது கடைத்தெருத் தலையே.

11