பக்கம் எண் :

சீறாப்புராணம்

48


முதற்பாகம்
 

      (இ-ள்) அன்றியும், அந்த மக்கமா நகரத்தினது கடை வீதியின் தானமானது பசிய சமுத்திரத்தில் தோற்றமாய் வர்த்தகர்களின் கைகளிற் புகுந்த பருப்பத்தைக் கொண்ட மணியாகிய முத்துக்களின் கூட்டமும், பிரகாசமானது தங்கப்பெற்ற மகத்தான பதும மணிகளின் கூட்டமும் இலங்குகின்ற ஒளிவையுடைய வயிரமணிகளின் கூட்டமும், சிவந்த கிரணங்களை வீசாநிற்கும் சூரியனும், அமுதத்தைப் பெற்ற செழிய கலைகளையுடைய சந்திரனும், நட்சத்திரங்களும், குடியாகப் புகுந்து இருந்ததை நிகர்த்தும் இருந்தது.

 

     88. அணிபெற வொழுங்காய் வயின்வயின் றிரண்ட

             வகிற்புகை முகிலின மெனவுங்

        குணில்பொரு முரசப் பெருங்குரல் கிடந்து

             குழுமிவிண் ணேறொலி யெனவு

        மணிவளைத் தடக்கைத் துவரிதழ் கனத்த

             வனமுலை மின்கண்மின் னெனவுந்

        தணிவில நிவந்த செழுங்கதிர் மாடந்

             தமனியக் கிரியினோ டிகலும்.

12

     (இ-ள்) அன்றியும், அந்த மக்கமாநகரத்தினது இடங்கள் தோறும் குறையாது கூடிய அழகு பெறும் வண்ணம் வரிசையாய் ஓங்கிய செழிய பிரகாசத்தை யுடைய மாளிகைகளானவை அகிற் கட்டைகளின் தூபமானது மேகக் கூட்டங்களெனவும் கூட்ட முற்றுக்கிடந்து குறுந்தடியால் அறைகின்ற முரசத்தினது பெரிய சத்தமானது இடியினோசை யெனவும், இரத்தினங்கள் பதிக்கப் பெற்ற வளையல்களினது பெரிய கைகளையும் பவளத்தை யொத்த அதரங்களையும் கனத்த இள முலைகளையுமுடைய மாதர்கள் மின்னலெனவும் மகா மேருப் பருவதத்தினோடு பகையா நிற்கும்.

 

     89. வெண்ணில வெறிக்கு மிரசதத் தகடு

             வேய்ந்தமே னிலைவயின் செறிந்து

        பண்ணிருந் தொழுகு மென்மொழிக் குதலைப்

             பாவையர் செழுங்குழல் விரித்து

        நண்ணிய துகிலுங் கமழ்தர வூட்டு

             நறும்புகை சுருண்டெழுந் தொழுங்காய்

        விண்ணினிற் படர்வ தேணியொன் றமைத்து

             விசும்பினுக் கிடுவது போலும்.

13

     (இ-ள்) அன்றியும், அந்த மக்கமா நகரத்தின் கீதமானது மாறாது குடியாக விருந்தொழுகா நிற்கும் மெல்லிய குதலை வார்த்தைகளை யுடைய மாதர்கள் வெண்மைபொருந்திய பிரகாசத்தை வீசும் பொற்றகட்டினால் அலங்கரித்த