பக்கம் எண் :

சீறாப்புராணம்

49


முதற்பாகம்
 

மேல்வீட்டின்கண் நெருங்கித் தங்களின் செழிய கூந்தல்களை விரித்துச் சேர்ந்த வஸ்திரங்களும் பரிமளிக்கும்படி ஊட்டிய அகிற் கட்டைகளின் நறிய தூபமானது சுருண்டெழும்பி ஆகாயத்திற் செல்லுவது, அவ்வாகாயத்திற்கு ஓர் ஏணியைச் செய்து இடுவதைப் போல நிற்கும்.

 

     90. அடுசெழும் பாகுந் தேனுமா ரமிர்து

             மனத்தொடு மனத்தொடுந் திருந்தி

        யிடனற விருந்து விருந்தொடு நுகர்வோர்

             மனையிட மெண்ணினை மறைக்குங்

        கடுவினை யடர்ந்த கொடுவினை விழியார்

             கறைதவிர் மதிமுகங் கண்டோ

        படர்தரு மாடக் குடுமியின் விசித்த

             பசுங்கொடி மதிமறுத் துடைக்கும்.

14

     (இ-ள்) அன்றியும், மனத்தோடு செவ்வையாய் இடமற விருந்தினருடன் இருந்து காச்சிய செழிய பாலையும், தேனையும், அமிர்தத்தையும் அன்னத்துடன் புசிப்பவர்களின் வீட்டினிடங்களானவை கணக்கை மறையச் செய்யும் விரிந்த மாளிகைகளின் உச்சியிற் கட்டிய பசிய துகிற்கொடிகளானவை விஷத்தைத் தமக்கு நிகரில்லையென்று பொருதிய கொடிய பாதகத் தொழிலைக் கொண்ட கண்களையுடைய மாதர்களின் குற்றமற்ற சந்திரனை யொத்த வதனத்தைப் பார்த்து ஆகாயத்தினிடத்துள்ள சந்திரனின் களங்கத்தைத் துடையாநிற்கும்.

 

     91. தேங்கமழ் சுருதி வரிமுறை படர்ந்து

             திகழ்தரு நித்திலக் கொடிக

        ளோங்கிட மாடக் குடுமியி னடுநின்

             றுலவிய திரவினும் பகலும்

        வீங்குசெங் கதிரி னிரவியுந் தவள

             வெண்கதிர் மதியமும் விலகிப்

        பாங்கினிற் புகுமி னெனக்கர மசைத்த

             பான்மையொத் திருந்தன மாதோ.

15

     (இ-ள்) அன்றியும், தேனைப் பரிமளியாநிற்கும் வேத வாசகத்தினது வரிகளானவை முறையாகப் பரவிப் பிரகாசிக்கும் முத்துக்களைத் தொங்கவிட்ட துகிற் கொடிகள் ஓங்குதலுற்ற மாளிகைகளின் உச்சியினது மத்தியில் நின்று உலவியவை, இரவிலும், பகலிலும், பெருத்த சிவந்த கிரணங்களையுடைய சூரியனையும் முத்துப் போலும் வெள்ளிய கலைகளையுடைய சந்திரனையும், விலகிப் பக்கத்தில் புகுங்களென்று தங்களின் கைகளை யசைத்த விதத்தை நிகர்த்திருந்தன.