|
முதற்பாகம்
1342.
நீருறை யிடத்துஞ்
செவ்வி நிழறிக ழிடத்தும் வாய்ந்த
பேரொளி மாட
வாயும் பெருகுமண் டபத்தின் சார்புங்
கூருநல் லறிவி
னோடு மறபிகள் குலத்து வேந்த
ரீ்ரமுற் றுருகி
நெஞ்ச மிணங்குற வணங்கி நின்றார்.
3
(இ-ள்)
அறபிகளின் கூட்டத்தினது அரசர்களான அவர்களியாவர்களும் தண்ணீர் தங்கியிருக்கப் பெற்ற
இடங்களிலும் அழகிய நிழல்கள் பிரகாசிக்கப்பட்ட இடங்களிலும் சிறந்த பெரிய பிரபையையுடைய
வீட்டினிடங்களிலும் பெருகிய மண்டபங்களின் சார்புகளிலும் அதிகரித்த நல்ல அறிவோடு அன்புற்று
உருகி மனமானது பொருந்தும் வண்ணம் ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவை வணங்கி நின்றார்கள்.
1343.
ஆரணத் துலுவும் வாய்ந்த வறிவுமந் திரத்தின் வாயும்
பூரண நிலைநின்
றங்கை பொருந்துற வளைக்கு மாறும்
பாரினி னெற்றி
தீண்டப் படும்படிக் குழைவு மற்றுங்
காரண மிதுகொ
லென்னக் காபிர்கண் டைய முற்றார்.
4
(இ-ள்)
வேதத்தினது உலுவையும், சிறந்த அறிவாகிய மந்திரத்தை யோதுகின்ற வாயையும், பூரணமாகிய
நிலையாக நின்று அழகிய கைகள் பொருந்தும் வண்ணம் வளைக்கின்ற மார்க்கத்தையும், பூமியின்கண்
நெற்றியானது தீண்டும்படி குழைகின்ற குழைவையும், மற்றவைகளையும் இது காரணமானதென்று அந்தத்
திருமக்கமா நகரத்தின் கண்ணுள்ள காபிர்கள் பார்த்துச் சந்தேக மடைந்தார்கள்.
1344.
மார்க்கமோ
நெறியோ வீதோர் வணக்கமோ மாறு பாடீ
தேற்குமோ
நல்லோர் கேட்கி லிணங்குமோ வினத்தார் வேத
நூற்கிது பொருந்து
மோவிந் நூதனச் செய்கை யாவு
நாற்குலத்
தவர்க்கு மொவ்வா நகையென நகைத்துச் சொல்வார்.
5
(இ-ள்)
அன்றியும், இது ஒரு மார்க்கமா? நெறியா? வணக்கமா? வேற்றுமையான இது யாவர்களுக்கும்
பொருந்துமா? நல்லவர்கள் கேள்வியுற்றால் அவர்கள் கருத்திற்கு இணங்குமா? நமது
கூட்டத்தார்களின் வேதகலைக்கு இது இசையுமா? இந்தப் புதுமையான செய்கைகளனைத்தும் நான்கு
குலத்தவர்களுக்கும் ஒவ்வாத சிரிப்பை யுடையதென்று சிரித்துச் சொல்லுவார்கள்.
1345.
மீறிய மதப்பி
னாலோர் வேதமொன் றிறங்கிற் றென்று
மீறிலா னிறுதித்
தூத னெனும்பெய ரெனக்குண் டென்றுந்
தேறிய வறிஞர்
போலத் தெளிவுற முகம்ம தென்போன்
கூறிய கூற்றைத்
தேற்றா விளைத்திடுங் கோட்டி யென்பார்.
6
|