பக்கம் எண் :

சீறாப்புராணம்

517


முதற்பாகம்
 

நமது தம்பிரானாகிய குபலைத் துதிக்கும் அழகிய முறைமையை விட்டீர். ஒரு காலத்தும் செய்யாத தீமையை விளையச் செய்தீர். உம்மோடு பொருந்திய ஜனங்க ளெல்லாவருக்கும் வீணாக ஒரு மார்க்கத்தைப் பொருத்தினீர். நம்முடைய குருவினது வழியைத் தவிரச் செய்தீர். கொள்ளாத கொடிய பாவத்தை உண்டாக்கியுங் கொண்டீர்.

 

1352. அமரருக் கவலஞ் செய்தீ ரருமறை வசனந் தீய்த்தீர்

     நுமர்களுக் கிடுக்கண் செய்தீர் நோற்றநோன் பதனை மாய்த்தீ

     ரெமருடன் பகைத்தீ ரிவ்வூ ரிருப்பிடம் பெயர்ந்தீர் பொல்லாக்

     கமரிடை வீழ்வ தல்லாற் கதியொன்றுங் காண மாட்டீர்.

13

      (இ-ள்) அன்றியும், தேவர்களுக்குக் கேட்டைச் செய்தீர். அரிதான வேதவாக்கியத்தை நாசம் பண்ணினீர். உம்மவர்களான பந்து ஜனங்களுக்குத் துன்பத்தைச் செய்தீர். இயற்றிய தவத்தை மடியச் செய்தீர். எம்மவர்களுடன் விரோதித்தீர். இந்தத் திருமக்கமா நகரத்தினது இருப்பிடத்தைப் பெயரப் பெற்றீர். ஆதலினால் நீவிர் பொல்லாத பிளவாகிய நரகத்தின்கண் வீழ்வதே யல்லாமல் ஒரு பதவியையும் காண்க மாட்டீர்.

 

1353. என்றவ ருரைப்பக் கேட்ட விளவல்புன் முறுவ றோன்ற

     நின்றுபுன் மொழிகள் வேறு நிகழ்த்திய பெயரை நோக்கித்

     தொன்றுதொட் டுவந்து நீவிர் துதிசெயும் புத்து கானை

     யின்றொழித் திடுமி னானொன் றியம்புதல் கேண்மி னென்றார்.

14

      (இ-ள்) என்று அந்தக் காபிர்கள் சொல்ல இளம் பருவத்தையுடையவர்களான சகுது றலியல்லாகு அன்கு அவர்கள் தங்களின் இரு காதுகளினாலுங் கேள்வியுற்றுப் புன்சிரிப்புத் தோன்றும் வண்ணம் அவ்விடத்தில் தானே நின்று வேறாய்க் கீழ்மையாகிய வார்த்தைகளைச் சொன்ன ஜனங்களான அக்காபிர்களைப் பார்த்து நீங்கள் ஆதிதொட்டு விரும்பி வணங்கும் விக்கிரகங்களை இன்றோடு நீக்குங்கள். நான் ஒன்று சொல்லுவதைக் கேளுங்களென்று சொன்னார்கள்.

 

1354. வானமும் புவியு மற்றும் வகுத்தவ னுண்மைத் தூத

     ரானவர் முகம்ம தென்போ ரவர்மொழி மாறாது நின்றோ

     ரீனமில் சுவன நன்னா டெய்துவ ரெங்கட் குற்ற

     தீனிலை பொய்மை யென்ற தேவரு நரகஞ் சேர்வார்.

15

      (இ-ள்) நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மென்று சொல்லப்பட்டவர்கள் வானலோகத்தையும் பூலோகத்தையும் மற்றுமுள்ளவைகளையும் வகுத்தவனான றப்புல் ஆலமீன்கள்