பக்கம் எண் :

சீறாப்புராணம்

520


முதற்பாகம்
 

வார்த்தைகளுடன் இரண்டு கைகளையும் குவியும்படி செய்து ஒதுக்கமுற்று வேற்றுமையானது மனத்தின்கண் அற்றுப் போகும் வண்ணம் வணங்குகின்ற இந்தப் பிசாசத்தினால் உங்களுக்குத் துரோகமே வாய்க்கும். இது சத்தியமென்று அந்தக் காபிர்களின் செயல்களைப் பழித்தார்கள்.

 

1361. வம்பி ராதசொன் மறைதன துரையென வகுத்தெந்

     தம்பி ரானையும் பழிப்பது தகுவதன் றெனவே

     வெம்பி மாசினத் தொடும்பல விக்கினம் விளைப்ப

     வம்பு ராசியொத் தூரவர் முகம்மதை யடர்ந்தார்.

22

      (இ-ள்) அப்போது அந்தத் திருமக்கமா நகரத்தை யுடையவர்களான காபிர்கள் சமுத்திரத்தை நிகர்த்து வம்பானது இருக்கப் பெறாத வார்த்தைகளையுடைய வேதமானது தனது வசனமென்று வகைப்படுத்தி எங்களுடைய சுவாமியையும் நீங்கள் பழித்துப் பேசுவது உங்களுக்குத் தகுவதல்லவென்று மனமானது வாட்டமுற்று பெரிய கோபத்தோடும் அனேக இடையூறுகளை உண்டாக்கும்படி நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை நெருங்கினார்கள்.

 

1362. அடர்ந்து வந்தவர்க் கெதிரபுத் தாலிப்சென் றடுத்துத்

     தொடர்ந்து வந்ததிங் கென்னெனச் சூழ்ச்சியாற் றேற்றிக்

     கடந்த சொல்லொடு மிதத்தொடும் பலவுரை காட்டித்

     திடம்ப டைத்தவர் விக்கின மனைத்தையுஞ் சிதைத்தார்.

23

      (இ-ள்) அவ்வாறு நெருங்கி வந்தவர்களான காபிர்களுக்கு முன்னர் நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் பெரிய தந்தையாரான அபீத்தாலி பவர்கள் போய் நெருங்கி நீங்கள் இவ்விடத்திற்குப் பின்பற்றி வந்தது என்ன காரணமென்றுத் தங்களின் நுண்ணிய அறிவினால் அவர்களைத் தேறும்படி செய்து மீறிய வார்த்தைகளோடும் இதத்தோடும் பல வசனங்களைச் சொல்லி காட்டித் திடத்தைக் கொண்டவர்களான அந்தக் காபிர்களின் இடையூறுக ளெல்லாவற்றையும் இல்லாமற் செய்தார்கள்.

 

1363. சமய பேதபுத் தனைத்தையுந் தகர்த்திடுந் தீனி

     லமையு மென்பவர் சிலர்சில ரம்மொழிப் பகையாற்

     கமைய றக்கடு கடுப்பவர் சிலர்சில ரிவர்க

     டமைவி லக்குத றொழிலபுத் தாலிபு தமக்கே.

24

      (இ-ள்) அன்றியும், மாறுபாடான மதப்புத்துகான்க ளெல்லாவற்றையும் பொடியாக்குங்கள். தீனுல் இஸ்லாமென்னு மார்க்கத்திற்கு உட்படுங்களென்று சொல்லுகிற பேர்கள் சிற்சிலர்.