பக்கம் எண் :

சீறாப்புராணம்

521


அந

முதற்பாகம்
 

அந்த வார்த்தைகளினது விரோதத்தினால் பொறுமையான தற்றுப் போகும் வண்ணம் வெடுவெடுப்பவர்கள் சிற்சிலர். இவர்களைக் கலகமில்லாது விலக்கி விடுவதே அபீத்தாலிபவர்களுக்குப் பிரதி தினமும் தொழிலாக இருந்தது.

 

1364. இவ்வ ணஞ்சில பகலிக லொடுநடந் ததற்பின்

     பௌவ மார்த்தெனக் குறைசிக டலைவர்கள் பலருஞ்

     செவ்வி தாயொரு நெறிப்படத் திரண்டுவந் தடைந்தார்

     மைவ ணந்தரு கொடையபித் தாலிபு மனைக்கே

25

      (இ-ள்) இந்தப்படியாகச் சிலபகல் விரோதத்தோடுங் கழிந்ததின் பிற்பாடு சமுத்திரமானது ஒலித்ததைப் போலக் குறைஷிகளின் தலைவர்கள் பல பேர்களும் ஒலித்து அழகாய் ஒரு நெறிப்படும்படி கூடி மேகங்களைப் போலத் தரா நிற்கும் ஈகையையுடைய அபீத்தாலி பவர்களின் வீட்டிற்கு வந்தார்கள்.

 

1365. இகன்ம னத்தவர் திரண்டபித் தாலிபை யெதிர்த்து

     சகத லத்திரு ளறவரும் பருதியொத் தனையோய்

     விகட விக்கினம் விளையுமுன் விலகநும் மிடத்திற்

     புகலு தற்கொரு கருமமுண் டெனப்புக லுவரால்.

26

      (இ-ள்) விரோதத்தைக் கொண்ட மனத்தை யுடையவர்களான அந்தக் காபிர்கள் அவ்வாறு கூட்டமுற்று அபீத்தாலி பவர்களை எதிர்த்து இந்தப் பூமியின்கண் அந்தகாரமானது அறும் வண்ணம் வரா நிற்கும் சூரியனை நிகர்த்தவர்களே! உங்களிடத்தில் தொந்தரவான இடையூறுகள் உண்டாகு முன்னர் விலக்கும்படி சொல்லுவதற்கு ஒரு காரிய முண்டுமென்று சொல்லுவார்கள்.

 

1366. ஆசி மாகுலக் கடனடு வெழுந்தக லிடத்தின்

     மாசி லாமதி நின்றுணை யவன்றரு மதலை

     யேசு வார்க்கிட மெனப்பிறந் திழிதர வினத்துப்

     பாச நீக்கிநந் தேவத மனைத்தையும் பழித்தான்.

27

      (இ-ள்) மகத்தான ஹாஷீம் குலமாகிய சமுத்திரத்தின் மத்தியிலெழும்பி விசாலமாகிய இந்தப் பூலோகத்தில் குற்றமற்ற அறிவையுடைய உமது சகோதரர் அப்துல்லா வென்பவர் தந்த மதலையான முகம்மதென்பவன் பேசுகிறவர்களுக் கிடமென்று சொல்லும் வண்ணம் உதயமாய் நிந்தையுறும்படி நம்முடைய கூட்டத்தவர்களின் விருப்பத்தையும் ஒழித்துத் தேவதங்களெல்லாவற்றையும் பழித்தான்.

 

1367. நடந்த முன்னெறி பழுதென நவிற்றியா லயத்து

     ளடைந்த பேரனை வரும்வழி கேடரென் றறைந்து

     கடந்த நூன்மறைப் பெரியவ ரிருசெவி கசப்பத்

     தொடர்ந்து பேசுவ தொறுத்தில னடிக்கடி தொடுத்தான்.

28