பக்கம் எண் :

சீறாப்புராணம்

524


முதற்பாகம்
 

1374. தந்தி ரத்தினாற் சிலவரைத் தனதுரைக் கடக்கி

     மந்தி ரத்துருச் சித்தியான் மார்க்கமொன் றெடுத்தான்

     சிந்தை யிற்றெளி வுற்றுநோக் கிடுமறைச் செயலீ

     ரிந்த வாறிவன் றொழிலெனச் சிலரெடுத் திசைத்தார்.

35

      (இ-ள்) அன்றியும், சில பேர்கள் வேத ஒழுங்கை யுடையவர்களே! நீங்கள் உங்களது சிந்தையின்கண் தேர்ந்து பாருங்கள். சில ஜனங்களை உபாயத்தினால் தனது வார்த்தைகளுக்கு அடங்கும் வண்ணஞ் செய்து மந்திர வுருவின் சித்தியினால் தனக்கு ஒரு மார்க்கத்தைத் தெரிந்து கொண்டான். இந்த முகம்மதினது தொழில் இவ்வாறு தானென்று எடுத்துச் சொல்லுவார்கள்.

 

1375. இழிவு செய்தொரு குலம்பிறந் தொருகுல மெடுத்து

     வழிகெ டத்தனி நின்றவன் றனதுயிர் மாய்க்கப்

     பழியும் பாவமு நினைத்திவை பழுதெனப் பலகான்

     மொழிய வேண்டுவ தில்லெனச் சிலர்மொறு மொறுத்தார்.

36

      (இ-ள்) அன்றியும், சில பேர்கள் ஒரு கூட்டத்திற் பிறந்து அக்கூட்டத்தை நிந்தை செய்து வேறே ஒரு கூட்டத்தைத் தெரிந்து கொண்டு நெறியானது கெடும் வண்ணம் ஏகமாய் நின்றவனான அந்த முகம்மதென்பவனின் ஆவியை மாய்ப்பதற்குப் பழியையும் பாவத்தையும் எண்ணி இவை குற்றமென்று பலபோதும் பேச வேண்டுவதில்லையென்று சொல்லி மொறு மொறுப்பார்கள்.

 

1376. நிறைத்த நந்நெறித் தேவத நிலைதலை குலைய

     வெறுத்த பேருயி ரகம்விசும் பினிற்குடி படுத்த

     லொறுத்த லென்னபித் தாலிபுக் குரைத்தினி யொருகாற்

     பொறுத்துச் செய்வது கருமமென் றனைவரும் புகன்றார்.

37

      (இ-ள்) அன்றியும், அவர்கள் நிறைந்த நமது மார்க்கத் தேவதங்களின் நிலைமையானது தலைகுலையும் வண்ணம் நிந்தித்த பேர்களினது ஆவியை விசாலமாகிய ஆகாயத்தின்கண் குடிபடுத்துவதை வெறுப்பது என்ன காரணமென்று கேட்க, அதற்கு அங்குற்ற யாவர்களும் இன்னும் ஒரு தடவை அபீத்தாலி பவர்களுக்குச் சொல்லிப் பொறுத்துச் செய்வதே காரியமென்று சொன்னார்கள்.

 

1377. இசைத்து ரைத்தவை நன்கென வினத்தொடு பலரும்

     விசைத்தெ ழுந்தபித் தாலிபு திருவயின் மேவித்

     திசைத்த டங்களுந் திக்கினுந் திரிதரு கவனக்

     குசைத்த டப்பரிக் குரிசின்முன் கூறுதல் குறித்தார்.

38