பக்கம் எண் :

சீறாப்புராணம்

534


முதற்பாகம்
 

      (இ-ள்) புருடர்களில் வல்லமையையுடைய அபீத்தாலிபவர்கள் அவ்வாறு சொல்லிய வார்த்தைகளை அந்நான்கு கூட்டத்தார்களுங் கேள்வியுற்றுத் திரளான முத்தலிபுக் கிளையார்களும் ஆஷிங் குலத்திலுள்ள பெரியவர்களும் மனசின் கண் விருப்பமுற்று இஃதுவே நல்லதென்று சொல்லி அவ்வபீத்தாலி பவர்களோடுஞ் சேர்ந்தார்கள்.

 

1410. மற்றி ரண்டு கிளைமுதன் மன்னரிங்

     குற்ற வார்த்தை யுசாவி யுறாதென

     வெற்றி வேந்தக நீங்கி வெறுத்திடும்

     பற்ற லாருறை பாலடைந் தாரரோ.

71

      (இ-ள்) மற்ற இரண்டு கிளையாகிய அப்துஷ் ஷம்சுக்கிளையிலும் நௌபல் கிளையிலுமுள்ள முதன்மையான அரசர்கள் இவ்விடத்திற் பொருந்திய வார்த்தைகளை மனசின்கண் ஆராய்ந்து இஃது கூடாதென்று விஜயத்தைக் கொண்ட மன்னவரான அபீத்தாலிபவர்களின் வீட்டை விட்டும் நீங்கி விரோதித்திடும் சத்துராதிகளாகிய அந்தக் காபிர்கள் தங்கா நிற்கும் இடத்தின்கண் போய்ச் சேர்ந்தார்கள்.

 

1411. மறுவு றுத்து மனத்தின னாகிநல்

     லறிவு நீங்கி யபூலகு பென்பவன்

     பெறுமு றைத்தலை மைப்பெய ரானுமக்

     குறுக லாருறை கூட்டத்தி லாயினான்.

72

      (இ-ள்) அன்றியும், அபீத்தாலிபவர்களின் சகோதரர்களிலொருவனென்னும் ஆபூலஹபென்று சொல்லப்பட்டவனாகிய பெறா நிற்கும் வரிசையான தலைமைப் பெயரை யுடையவனும் குற்றத்தையே வருவித்துக் கொள்ளும் மனத்தையுடையவனாகி நல்ல அறிவுமாறி அந்தச் சத்துராதிகளாகிய காபிர்கள் தங்கா நின்ற கூட்டத்தின்கண் போய்ச் சேர்ந்தார்கள்.

 

1412. பிரிவு செய்கிளை தன்னொடும் பின்னவ

     னுரிய னாயின னென்று முளத்தினில்

     வெருவி லாதுபுன் மூரல் விளைத்தட

     லரியின் சீற்றமுற் றாரபித் தாலிபே.

73

      (இ-ள்) அப்போது அபீத்தாலிபவர்கள் பிரிவைச் செய்த தங்களின் கிளையார்களோடும் தங்கள் தம்பியாகிய ஆபூலஹபென்பவனும் சினேகத்தை யுடையவனாயினா னென்று சொல்லி மனதின்கண் அஞ்சாது புன்சிரிப்புச் செய்து வலிமையையுடைய சிங்கத்தைப் போலக் கோபமுற்றார்கள்.