பக்கம் எண் :

சீறாப்புராணம்

539


முதற்பாகம்
 

     மேலு நல்வழி திருத்தி னோர்கள்பத

         மீது சார்தனல னென்னவுஞ்

     சால மிக்ககவி தைத்தி றத்தொடு

         தணப்பி லாதுற வனுப்பினான்.

86

      (இ-ள்) அவ்வித மெழுதிய நிருபத்தின் உத்தரமானது நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைக் கொண்டும் சொல்லிய நிந்தனையையுடைய வார்த்தைகள் குற்றமென்றும், ஒருவருக்கொருவர் குணமற்ற விரோதத்தைச் செய்து கொள்ளுவது குற்றமென்றும், மேலும் நல்ல சன்மார்க்கத்தில் திருத்தினவர்களுடைய பாதங்களின் மேல் பொருந்துவது நலமென்றும், அதிகமான பெருமை பொருந்த கவிதையினது வல்லமையுடன் பிரிவில்லாது பொருந்தும் வண்ணம் மக்கமா நகரத்தார்களுக்கு அனுப்பி வைத்தான்.

 

1426. வந்த வாசக முணர்ந்து காபிர்கண்

         முகம்ம தைப்பழுது பேசிய

     நிந்த னைச்சின மொறுக்கி லார்தின

         நிகழ்த்து நல்வழி மனங்கொளார்

     தந்தி ரத்திலுயர் மன்னர் சொன்னமொழி

         தன்னையுந் நினைவி லெண்ணிலார்

     செந்த ழற்குழிக ளேழு மாளமுறை

         தேடி நன்னெறியை மூடினார்.

87

      (இ-ள்) அவ்வாறு அபூகைசென்பவனால் அனுப்பப்பட்டு தங்களிடத்தில் வந்து சேர்ந்த நிருபத்தினது வாசகத்தை அந்தக் காபிர்கள் அறிந்து நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைக் குற்றம் பேசிய நிந்தனையையுடைய கோபத்தை வெறுத்திலர்கள். பிரதிதினமும் கூறா நிற்கும் நல்ல மார்க்கத்திற்கு மனங்கொண்டிலர்கள். உபாயத்தினால் உயர்ந்த அரசர்கள் சொல்லிய வார்த்தைகளையும் கருத்தில் நினைத்திலர்கள். சிவந்த அக்கினியையுடைய நரகக்குழிக ளேழையும் ஆட்சி செய்யும் வண்ணம் ஒழுங்கைத் தேடி நல்ல சன்மார்க்கத்தை மூடினார்.

 

1427 இன்ன வாறுமுர ணான காபிரிட

         ராயி ருப்பவு முகம்மது

    முன்னு நன்னெறி நிறுத்து வேனெனு

         முளத்தி னோடுதடு மாறிலா

    தன்ன மன்னமட வார்க்கு மாடவர்

         தமக்கு மற்றவர் தமக்குமே

    லின்ன லற்றவிசு லாமி னேர்வழி

         யிளைக்கி லாதுற விளக்கினார்.

88