பக்கம் எண் :

சீறாப்புராணம்

545


முதற்பாகம்
 

கைகளையு மெடுத்துப் பதுவாவென்னும் சாபம் சொல்லிவிட்டுத் தங்களின் திசையை நோக்கிச் சென்றார்கள்.

 

எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

1438. வீணுரை பகர்ந்து மிடும்புக டொடுத்தும்

          வெவ்வினைக் கொடுங்கொலை நினைத்துங்

     காணிலாப் புதுமை விளைத்தநா யகத்தைக்

           காபிர்கள் வெறுத்திடுங் காலந்

     தூணினைத் துரும்பா நினைத்தென ஆசின்

           றோன்றலில் அக்கமென் றொருவன்

     பூணிலாப் பவநோய் பூண்பது தனக்கே

           பெருவிலா தொருதொழி லெடுத்தான்.

99

      (இ-ள்) அந்தக் காபிர்கள் ஒருகாலத்திலும் காணாத அற்புதங்களைச் செய்த நாயகமான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை அவ்வாறு வீணான வார்த்தைகளைப் பேசியும் துன்பங்களைப் பொருத்தியும் வெவ்விய செயலையுடைய கொடிய கொலைத் தொழிலை எண்ணியும் பகைத்திடுங் காலத்தில் ஆசின் மக்களில் அக்கமென்று சொல்லு மொருவன் தூணைத் துரும்பாக நினைத்ததைப் போல அணியாத பாவமாகிய பிணியைத் தனக்கு அணிவதையுடைய ஒப்பற்றதான ஒரு வேலையை எடுத்தான்.

 

1439. இருவிழி கறுப்பு மொருபுறத் தொதுங்க

         விதழ்கடை வாயிடைப் பிதுங்கத்

     திருகுற முகத்தைச் சுரிப்பொடு வளைத்துத்

         திகழ்தரு நாசியைச் சிலிர்த்துப்

     பெருகிய கழுத்தி னரம்புகள் விறைப்பப்

         பிளந்துவாய் நாநுனி புரட்டி

     வரிவர வலித்து முகம்மதை நோக்கி

         மனத்துறா திகழ்ச்சிசெய் தனனால்.

100

      (இ-ள்) இரண்டு கண்களிலு முள்ள கறுப்புகள் ஒருபக்கத்தில் ஒதுங்கவும், இரண்டு உதடுகளும் கடைவாயின்கண் பிதுங்கவும், முகத்தைத் திருகும் வண்ணம் சுரிப்புடன் வளைத்துப் பிரகாசியா நிற்கும் நாசியைச் சிலிர்க்கும்படி செய்துப் பெருக்கமுற்ற கழுத்தின் நரம்புகள் மரத்துநிற்க வாயைப் பிளந்து நாவினது நுனியைப் புரளச் செய்து வரியுண்டாகும் வண்ணம் நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைப் பார்த்து வலித்து மனத்தின்கண் பொருந்தாது நிந்தை செய்தான்.