பக்கம் எண் :

சீறாப்புராணம்

551


முதற்பாகம்
 

1450. திருமறை மொழியொன் றுரைத்துவிண் ணவர்கோன்

         சேணிடை யுறைந்தபின் மாறா

     விரைகிடந் தருந்தேன் றுளித்தகுங் குமத்தார்

         விளங்கிய புயவரை துலங்க

     வருமுதன் மதமா கரியெனத் திருந்து

         மனத்திடைக் களிப்பொடு மகிழ்ந்து

     தருமுகிற் கவிகை யிலங்கிடச் சிறந்த

         சபாமலை யிடத்தினிற் சார்ந்தார்.

111

      (இ-ள்) அவ்வாறு இறங்கிய அமரேசுவரரான ஜபுறயீல் அலைகிஸ்ஸலா மவர்கள் தெய்வீகம் தங்கிய வேதவாசக மொன்றைச் சொல்லி ஆகாயத்தின்கண் சென்று தங்கிய பிற்பாடு வாசனையானது நீங்காது கிடக்கப் பெற்று அரிய மதுவைத் துளிக்கும்படி செய்யும் குங்குமப் புஷ்பத்தினாலான மலர்மாலை பிரகாசிக்கும் தோள்களாகிய மலைகள் இலங்கும் வண்ணம் வரா நிற்கும் முதலான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் மதங்களை யுடைய பெருமை பொருந்திய யானையைப் போலச் செவ்வையாகிய தங்களின் மனசின்கண் சந்தோஷத்தோடு மகிழ்ச்சி யடைந்து மேகங்கள் தருகின்ற குடையானது ஒளிரும்படி சிறப்பமைந்த சபா மலையினது இடத்திற்போய்ச் சேர்ந்தார்கள்.

 

1451. உடுப்புறம் பொதிந்த மதிதவழ் மலையி

         னுச்சியி னடுமிசை யுறைந்து

     கடுப்பறக் கொடுஞ்சொற் பிறந்திடா தமிர்தங்

         கனிந்தவா யிதழ்திறந் தெவர்க்கு

     மெடுப்பரும் புதுமை யுண்டென வினத்தோ

         ரியாரையு மினிதுற நோக்கிக்

     கொடுப்பதற் கெழுமா முகிலினம் பொருவாக்

         குருநெறி முகம்மது விளித்தார்.

112

      (இ-ள்) அவ்விதம் போய்ச் சேர்ந்த ஈவதற்கெழா நிற்கும் பெருமை தங்கிய மேகக் கூட்டங்களும் ஒப்பாகாத குருநெறியையுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் பக்கங்களில் நட்சத்திரங்களினால் பொதியப் பெற்ற சந்திரனானது தவழா நிற்கும் அந்த மலையினது முகட்டின் நடுவில் தங்கிக் கோபமறும் வண்ணம் கொடுமையையுடைய வார்த்தைக ளுண்டாகாமல் அமிர்தமானது கனியப் பெற்ற தங்களின் வாயினது அதரங்களைத் திறந்து யாவர்களுக்கும் தாங்குதற்கரிய ஓரற்புத மானது உண்டுமென்று சொல்லித் தங்களின் குடும்பத்தார்கள் எல்லாவரையும் பார்த்து இனிமை யுறும்படி கூப்பிட்டார்கள்.