பக்கம் எண் :

சீறாப்புராணம்

552


முதற்பாகம்
 

1452. கல்லகத் துறைந்து முகம்மது விளித்த

         கட்டுரை கேட்டலு மினத்தோர்

     பல்லருஞ் செறிந்து திரளொடு மெழுந்து

         பார்த்தறி குவமென நடந்து

     செல்லிடம் பிரியாக் கருமுகிற் கவிகை

         நீழலிற் சேட்டிளங் கதிர்விட்

     டெல்லவ னெழுந்த தெனநபி யிருந்த

         விடத்தினி லுறைந்தன ரன்றே.

113

      (இ-ள்) நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்வாறு அந்தச் சபாமலையின்கண் தங்கிக் கூப்பிட்ட உறுதியான வார்த்தைகளை அவர்களின் பந்துக்களாகிய மக்கமா நகரத்திலுள்ள காபிர்கள் தங்களின் காதுகளினாற் கேள்வியுற்ற மாத்திரத்தில், பலபேர்களும் நெருக்கமுற்றுத் தங்களின் கூட்டத்தோடும் எழும்பி முகம்மது சொன்ன அற்புதத்தை நாம் போய்க் கண்டு அறிகுவோமென்று சொல்லி நடந்து சென்று செல்லா நிற்கும் இடங்களெல்லாவற்றிலும் நீங்காத கரிய மேகக் குடையினது நிழலில் அழகிய இளங்கிரணங்களை நானாபக்கங்களிலும் விட்டுச் சூரியனானவன் எழும்பினதைப் போன்ற அந்நபிகள் பெருமானவர்கள் இருந்த இடத்தின்கண் தங்கியிருந்தார்கள்.

 

1453. காரண முளதென் றுரைத்தெமை விளித்த

         கருத்தறி கிலமெனக் கடிதி

     னூரவ ருரைப்ப வானவ ருரைத்த

         வுரையினை யுளத்தினி லிருத்தித்

     தாரணிப் புறத்திற் றெறும்படை திரண்டு

         வந்தது தமர்க்கிட ரெனயா

     னீரமுற் றுரைப்ப வெவர்க்குமுண் மையதா

         யிருப்பதோ வெனநபி யிசைத்தார்.

114

      (இ-ள்) அவ்விதம் தங்கியிருந்த ஊரவர்களான அந்தக் காபிர்கள் எங்களை விரைவாய் ஓரற்புத முண்டுமென்று சொல்லிக் கூப்பிட்ட தங்களின் கருத்தை யறிந்திலோம். அது யாது? என்று கேட்க, அதற்கு நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் வானவரான ஜபுறயீல் அலைகிஸ்ஸலா மவர்கள் சொல்லிய வார்த்தைகளை மனசின்கண் இருக்கும்படி செய்து நான் அன்புற்று நமது உறவினர்களுக்கு இடராக நமது பூமியாகிய இந்தத் திருமக்கமா நகரத்தின் பக்கத்தில் பகைமையை யுடைய ஒரு சேனையானது கூட்டமுற்று வந்ததென்று சொன்னால் அது யாவர்களுக்கும் சத்தியமாய் இருக்கக் கூடியதா? என்று கேட்டார்கள்.