பக்கம் எண் :

சீறாப்புராணம்

558


முதற்பாகம்
 

1467. உறுக்கினார் செழுங்கர முரத்தொ டொன்றவே

     யிறுக்கினா ரடிக்கடி யெடுத்த தீவினை

     முறுக்கினா ரல்லது மூட்டுந் தண்டனைக்

     குறுக்கினா ரிலைக்கொலைக் கொடுமை யாளரே.

128

      (இ-ள்) கொலையினது கொடுமையையுடையவர்களான அந்தக் காபிர்கள் அவ்வாறு இருக்கும் அந்நால்வர்களையும் அதட்டி அவர்களின் செழிய கைகள் மார்போடு பொருந்தும் வண்ணம் இறுகச் செய்து கொடிய செயல்களை அடிக்கடி முறுக்கினார்களேயல்லாமல் அவர்கள் மூட்டா நிற்கும் ஆக்கினையைக் குறைத்தார்களில்லர்.

 

1468. நன்னிலை கெடுமவர் நடத்தும் வல்வினை

     யின்னல்கண் டெழினபி யிடருற் றாரொடு

     மன்னிய துயரினைப் பொறுத்த மாட்சியாற்

     பொன்னுல குமக்கென வுரைத்துப் போயினார்.

129

      (இ-ள்) அப்போது அழகிய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் நல்ல நிலைமையானது கெடப்பெற்ற அந்தக் காபிர்கள் அவ்வாறு நடத்தா நிற்கும் கொடிய செயலைப் பார்த்து அத்துன்பத்தைக் கொண்ட அந்நால்வர்க ளோடும் நீங்கள் பொருந்திய வருத்தத்தைப் பொறுத்துக் கொண்ட பெருமையினால் உங்களுக்குச் சொர்க்கலோகமென்று சொல்லிவிட்டுப் போயினார்கள்.

 

1469. மண்ணிடை கணவனை நோக்கி மைந்தனை

    யெண்ணுற நோக்குவ ளிதயம் வாடுமப்

    பெண்ணினை நோக்குவள் பெய்யுஞ் செந்தழல்

    விண்ணினை நோக்குவள் வீடு நோக்குவாள்.

130

      (இ-ள்) அவர்கள் அவ்விதம் போகவே அந்நால்வர்களிலொருவரான சுமையாவென்பவர் இப்பூமியின்கண் தமது நாயகராகிய ஆசிரென்பவரைப் பார்த்துக் கவலையானது பொருந்தும் வண்ணம் தமது மகன் அம்மாறென்பவரைப் பார்ப்பார். மனமானது சோர்வடையும் தமது மகளாரான அப்பெண்ணைப் பார்ப்பார். சிவந்த அக்கினியைப் பொழியா நிற்கும் ஆகாயத்தைப் பார்ப்பார். தமது வீட்டைப் பார்ப்பார்.

 

1470. யாசிறு மனைவிநல் லறிவுக் கில்லிட

     மாசறத் தீன்பயிர் வளர்க்கும் வேலியார்

     பாசமற் றவரிடர் பார்த்தி லேனெனக்

     காசறு பொன்னகர் காணப் போயினார்.

131