பக்கம் எண் :

சீறாப்புராணம்

602


முதற்பாகம்
 

1596. விதியின் முறையென் றகுமதுதான்

         விளக்கு முரைகேட் டுமறுகத்தாப்

     மதிமெய் மயங்கி வஞ்சனையின்

         மாயத் துறைந்தா ரெனவூரும்

     பதியும் பெருக்க வுரைநடத்திப்

         பற்றா ரிவரென் றபூசகல்தன்

     புதிய மொழியைத் தொல்கிளைக்குப்

         புகழ்ந்தா னபியை யிகழ்ந்தானே.

94

      (இ-ள்) அப்போது அபூஜகி லென்பவன் உமறுகத்தா பானவர் அஹ்மதென்னும் பெயரையுடைய முகம்மதென்பவன் விளக்கிக் காட்டும் வார்த்தைகளைக் கேள்வியுற்று கடவுளால் நியமிக்கப்பட்ட விதியினது முறைமைக ளென்றுத் தமது அறிவும் உடலும் மயங்கப் பெற்று வஞ்சனையையுடைய மாயத்தின்கண் தங்கினாரென்று அந்தத் திருமக்கமா நகரத்திலும் மற்றும் தேசங்களிலும் அதிகரிக்கும் வண்ணம் வார்த்தைகளை நடாத்தி இந்த உமறுகத்தா பென்பவர் இனி நமது சத்துராதி யானவரென்று நூதனமாகிய சொற்களைப் பழைய தனது குடும்பத்திலுள்ளவர்களுக்குப் புகழ்ந்து கூறி நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை நிந்தித்தான்.

 

1597. சரியுந் திரைமுத் தெறிந்திரைக்குஞ்

         சலதிக் குபிரி னிடையினடு

     விரியு மமுத மெனுங்கலிமா

         மேலோ ரொருமுப் பஃதுடன்மூன்

     றரிய மகடூ வறுவரும

         றரச ரொருவ ரவனியினிற்

     றெரியு மிலக்க மிந்நான்கு

         பதின்ம ருடனுஞ் சிறந்திருந்தார்.

95

      (இ-ள்) சாயா நிற்கும் அலைகளினால் முத்துக்களை வீசி ஒலிக்கும் சமுத்திரமாகிய காபிர்களினிடை மத்தியில் விரிகின்ற அமுதமென்று சொல்லும் கலிமாவைப் பெற்ற மேன்மையை யுடையவர்களான முஸ்லிம்கள் முப்பத்து மூன்று பேர்களும் அருமையாகிய பெண்கள் ஆறு பேர்களும் உமறுகத்தாபென்று சொல்லும் இராஜரான ஒருவருமாகிய விளங்கிய இலக்கத்தையுடைய இந்த நாற்பது பேர்களோடும் இப்பூமியின்கண் நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் சிறப்புற்றிருந்தனர்.