பக்கம் எண் :

சீறாப்புராணம்

609


முதற்பாகம்
 

1618. என்றுரை பகர்ந்தவ னிதயங் கூர்தர

     நன்றென முறுவல்கொண் டினிய நந்நபி

     குன்றினிற் றிரிதரு முடும்பைக் கூடிய

     மன்றினில் விடுகவென் றுரைவ ழங்கினார்.

21

      (இ-ள்) என்று வார்த்தைகள் சொன்னவனான அந்த வேடனின் மனமானது கூரும் வண்ணம் இனிமையையுடைய நமது நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் நல்லதென்று சிரித்து மலைகளில் திரியா நிற்கும் அந்த உடும்பைக் கூட்டமுற்ற இந்த சபையின்கண் விடுவாயாகவென்று ஆக்கியாபித்தார்கள்.

 

1619. கானிடை திரிந்தறத் தவித்துக் காறளர்ந்

     தேனினி விடிலுடும் பெளிதி னெய்திடா

     தானதான் மடிமிசை யாக்கி னேனறுந்

     தேனவி ழலங்கலோ யென்னச் செப்பினான்.

22

      (இ-ள்) அவர்கள் அவ்விதம் ஆக்கியாபிக்கவே அந்த வேடனானவன் நறிய தேனானது நெகிழப் பெற்ற மலர் மாலையையுடையவர்களே! யான் இந்த உடும்பைப் பிடிப்பதற்காய்க் காட்டின்கண் திரிந்து மிகவும் இளைத்து இரண்டு கால்களும் தளர்ச்சியடைந்தேன். இனி இதை விட்டால் இவ்வுடும்பு இலேசாய் நம்மிடத்திற் சேராது. ஆனதினால் அதை யான் எனது மடியின்மீது ஆகும்படி செய்தேனென்று சொல்லினான்.

 

1620. எடுத்துன துடும்பையென் னிடத்தின் முன்னிதா

     விடுத்திடி லகன்றிடா தெனவி ளம்பலு

     மடுத்தமென் மடிபுகு முடும்பை வாங்கியங்

     கடுத்தனன் விடுத்தன னறபி வேடனே.

23

      (இ-ள்) அப்போது நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் உனது உடும்பைத் தூக்கி எனது இடத்தின் முன்னாக விட்டால் அவ்வுடும்பானது அவ்விடத்தை விட்டும் நீங்கிச் செல்லாதென்று சொன்ன மாத்திரத்தில் அறபியாகிய அந்த வேடன் நிறைந்த மெல்லிய தனது மடியின்கண் புகா நிற்கும் அவ்வுடும்பை வாங்கி அந்நபிகள் பெருமானவர்களை நெருங்கிக் கீழே விட்டான்.

 

1621. நெடுந்தலை யெடுத்துவா னிமிர்த்து முள்ளெனப்

     படுந்தரத் துகிர்நிலம் பதிப்ப வூன்றியெள்

     ளிடுந்தரை யகன்றிடா திறைவன் றூதெனத்

     திடந்தர மனத்தினிற் றெளிந்து நோக்கிற்றே.

24

      (இ-ள்) அவ்வாறு விடவே அவ்வுடும்பானது நெடிய தனது தலையைத் தூக்கி வாலை நிமிரும்படி செய்து முள்ளைப்