பக்கம் எண் :

சீறாப்புராணம்

669


முதற்பாகம்
 

அறிவினால் அவர்கள் தெளிவடையும்படி இனிமையோடும் கூறத் தொடங்கினார்கள்.

 

1789.குவைலிதுக் கரும்பெருங் குலத்திற் றீபமே

    புவியில்விண் ணவர்தினம் போற்றும் பூவையே

    கவினுமென் னுயிரன்னீர் கவலல் காவலோ

    னவனரு ணம்மிடத் தகல்வ தில்லையால்.

39

      (இ-ள்) குவைலி தரசனின் அருமையான பெரிய குலத்திற்குத் தீபமானவரே! தேவர்களான மலாயிக்கத்துமார்கள் இவ்வுலகத்தின் கண் பிரதிதினமும் துதியா நிற்கும் பூவையானவரே! அழகிய எனது உயிருக்குச் சரியானவரே! நீவிர் கவலைப்பட வேண்டாம்! யாவற்றையும் காப்பவனான அல்ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவின் கிருபையானது நம்மிடத்தில் நின்றும் ஒருபோதும் நீங்குவதில்லை.

 

1790.மன்பெரும் புவியினில் வாழு மாந்தரிற்

    றுன்புறா தவரிலைத் துன்பைத் துன்புறா

    தின்பமே கொள்பவ ரிலங்கும் பொற்பதிக்

    கன்பரா யிருப்பரென் றறிவு சொற்றதே.

40

      (இ-ள்) பொருந்திய இந்தப் பெரிய உலகத்தின்கண் வாழா நிற்கும் மனுஷியர்களில் துன்பமடையாதவர்கள் ஒருவருமில்லர். அத்துன்பத்தைத் துன்பமாய்க் கொள்ளாது இன்பமாய்க் கொள்பவர்கள் பிரகாசிக்கின்ற சொர்க்கலோகத்திற்கு அன்பராயிருப்பார்க ளென்று அறிவாகிய வேதமானது சொல்லிற்று.

 

1791.இனப்படைக் கடனடு விருந்து ளோமியாந்

    தனிப்பவ னருண்மரக் கலத்தின் சார்பினாற்

    பனிப்படா மகிழ்கரை படுத லல்லது

    துனிப்பட லறிவெனுஞ் சூழ்ச்சித் தன்றரோ.

41

      (இ-ள்) அன்றியும், நாம் இனமாகிய படையென்னுஞ் சமுத்திரத்தினது மத்தியில் இருந்துள்ளோம். யாவும் ஒழிந்து தனிப்பவனான ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவின் கருணையாகிய மரக்கலத்தினது சார்பினால் பயமற்ற மகிழ்வென்னும் கரை சார்வதே யல்லாமல் துன்பப்படுவது அறிவென்று சொல்லா நிற்கும் நுண்மைத்தல்ல.

 

1792.கொதிப்படர் குபிரெனுங் குறுக லார்திர

    ளதிர்ப்படர் தீன்படைக் கலத்தி னாக்கம்போ

    லெதிர்ப்படுந் துன்பெனு மிருளை யுண்மகிழ்

    மதிப்பெனுங் கதிரினான் மாய்த்தல் வேண்டுமால்.

42