பக்கம் எண் :

சீறாப்புராணம்

812


முதற்பாகம்
 

தாமரை மலரை நிகர்த்த சரணங்களைப் புகழ்ந்து துதித்துப் பொருந்திய தீனுல் இஸ்லாமாகிக் குபிர் மார்க்கத்தை யொழித்து அத்தீனுல் இஸ்லாமென்னும் மார்க்க நிலைமையை ஓங்கும் வண்ணஞ் செய்வே னென்று கூறினான்.

 

2186. திசைமுழுது மொருபுடையிற் கிடத்துங்கரு

          முகிற்கவிகைச் செம்ம னேர்ந்த

     குசையினைநின் மனைத்தலத்தி லிருந்தவுரு

          வெடுத்திவணிற் கொடுவா வென்ன

     விசைதரும்வண் டிமிர்தொடையல் புரண்டசைய

          வெழுந்துமனை யிடத்தி னேகி

     வசையறுநன் மணிக்கலன்க ளொடுபலதூ

          சணிந்துமலர் வனைந்திட் டானால்.

7

      (இ-ள்) எண்டிசைகள் முழுவதையும் ஒரு புடையிற் கிடக்கச் செய்யும் கரிய மேகக் கவிகையை யுடைய செம்மலான நமது நாயகம் காத்திமுல் அம்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்வாறு உடன்பட்ட குசைனுவென்பவனை உனது வீட்டின் கண்ணிருக்கும் சொரூபமாகிய புத்துக்கானை எடுத்து இவ்விடத்தில் கொண்டு வருவாயாக வென்று கற்பிக்க, இராகத்தைத் தரா நிற்கும் வண்டுகளானவை ஒலிக்கின்ற மாலைகள் புரண்டு அசையும் வண்ணம் எழும்பி வீட்டின்கண் சென்று அப்புத்துகானுக்கு நிந்தையற்ற நல்ல இரத்தின ஆபரணங்களுடன் பல வஸ்திரங்களைத் தரித்துப் புஷ்பங்களினால் அலங்காரஞ் செய்தான்.

 

2187. விரைத்தழைகள் சுமத்திநறும் புகைகமழ்த்தி

          விளங்குசெழுங் கரத்தி லேந்தி

     யுரத்தினணைத் தொருதுகில்கொண் டுறப்போற்றி

          நடந்துமறு கூடு லாவி

     வரைத்தடத்திண் புயத்துநறை கமழ்ந்தமுகம்

          மதுதண்மதி வதன நேரா

     யிருத்தியொரு பாலிருந்தான் மும்மறையுந்

          தெரிந்துமனத் திருத்தி னோனே.

8

      (இ-ள்) அவ்வாறு செய்து முன்னுள்ள தௌறாத்து, இஞ்சீல், சபூறென்னும் மூன்று வேதங்களையும் அறிந்து இருதயத்தின்கண் இருக்கச் செய்தவனான குசைனு வென்னும் அறபி யானவன் பரிமளத்தைக் கொண்ட தளிர்களை அதன் மேற் சுமத்தி வாசனையையுடைய தூமத்தைக் கமழப் பண்ணி விளங்குகின்ற செழிய கைகளிற் றாங்கி மார்போடு மணைத்து ஒரு வஸ்திரத்தைக்