முதற்பாகம்
பிராட்டியார் பொன்னுலகு
புக்க படலம்
கலிநிலைத்துறை
2192.
தனுவின் மான்மத
முலவிய முகம்மது தழைப்பப்
புனித மாமறை மதிகலி
மாக்கதிர் பொழிய
வினிதில் தீன்றிசை
விளங்கிட விருக்குமந் நாளி
லனில மொத்தபித்
தாலிபுக் கடைந்ததா யாசம்.
1
(இ-ள்) காத்திரத்
தினது கஸ்தூரி வாசனை உலவப் பெற்ற நபிகட் பெருமானார் நாயகம் எம் மறைக்குந் தாயகம் ஹபீபு
றப்பில் ஆலமீன் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தழைக்கவும், பரிசுத்தத்தைக்
கொண்ட மகத்தாகிய புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தினது சந்திரனை நிகர்த்த கலிமாவானது கிரணங்களைச்
சிந்தவும், தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கமானது இனிமையுடன் எண்டிசைகளிலும் பிரகாசிக்கவும்,
இருக்கின்ற அந்தக் காலத்தில் அபீத்தாலி பென்பவருக்குக் காற்றினது விரைவைப் போலும், துன்பமானது
வந்து சேர்ந்தது.
2193.
வருத்த நாட்குநாண்
முற்றிமெய் மெலிவொடு மயங்கி
யிருத்தல் கண்டுநந்
நபிமன மிடைந்தரு கிருந்தார்
திருத்தி லாஅபூ
சகுலொடு நகரவர் திரண்டு
குருத்த வெண்கதிர்ச்
சுதைமனை யிடனறக் குவிந்தார்.
2
(இ-ள்) அன்றியும்,
அத்துன்பம் நாளுக்கு நாள் அதிகப்பட்டுச் சரீர வாட்டத்துடன் மயக்கமுற்று இருப்பதை நமது நாயகம்
நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் பார்த்து இருதயத்தின்கண் வருத்தங்
கொண்டு அவ்வபீத்தாலி பென்பவரின் பக்கத்தி லுட்கார்ந்திருந்தார்கள். மேலும் செவ்வைப் படாத
அபூஜகிலென்பவனோடு அந்தத் திருமக்கமா நகரத்திலுள்ள ஜனங்கள் கூடி வெள்ளிய கிரணங்கள் தழைத்த
வெண் சாந்தைக் கொண்ட அவ்வீட்டில் இடமில்லாது வந்து கூடினார்கள்.
2194.
பெருக வந்திருந்
தவர்களை விழித்துரை பிறழா
தொருவ ருக்கொரு
பகையிலை யெனும்படி யொழுகி
யிருமெ னத்தலத்
தவர்க்கினத் தவர்க்கெடுத் திசைத்தார்
தெருளுஞ் சீரபித்
தாலிபென் றுரைத்திடுஞ் செம்மல்.
3
(இ-ள்) அவ்வாறு
கூடவே உணரா நிற்கும் சிறப்பை யுடைய அபீத்தாலி பென்னும் அரசரானவர் அதிகமாக அங்கு வந்து தங்கிய
|