மன்னர் தனியே வரக்கண்டு மலைத்து நோக்கிய சபையிடமே "இன்னும் சிறிதே பொறுத்திடுவீர். என்மகள் சுலைகா வந்திடுவாள். ஒன்றும் தவறாய் எண்ணாதீர் உங்களில் யாரைத் தேர்ந்தாலும் இன்றே திருமணம் செய்திடுவேன்!" என்றார் மன்னர் தைமூஸே. பாதச் சிலம்பு ஒலிசெய்யப் பாங்கியர் சூழச் சுலைகாதன் காதல் தெய்வம் கண்டிடவே கண்களை எங்கும் சுழற்றிடவே மோதும் ஆவல் உந்திடவே மௌன மாக வந்திடவே பாதம் நோகும் எனச்சேடிப் பாதையில் மலர்கள் தூவினளே. ஏக்கம் அடைந்தே இருந்தோர்கள் இருவிழி விழித்துச் சுலைகாவை நோக்கி மகிழ்ந்தார் அந்நேரம் நுதலே சுருங்கச் சுலைகாவும் நோக்க லானாள் சபையோரை. நொடியில் அறிந்து தன்மகுடம் தூக்கி எறிந்து "எங்கேஎன் தோன்றல்" என்று முகங்கடுத்தாள். மன்னர் தைமூஸ் மனம்நொந்து மகளைப் பார்த்து "சுலைகாவே முன்னர் கனவில் வந்தவரை முழுதும் சுற்றிப் பார்த்திடுவாய்! |