ஊடல் : நெஞ்சுவந்த மெய்யன்பர் என்றாலும் பிரிந்துபின் நெருங்கு வாரேல் அஞ்சுவரே அல்லாமற் கொஞ்சுவரோ! சுலைகாவும் அவ்வா றானாள், பிஞ்சுமனம் வெம்பிடவே நெடுங்காலம் தனைமறந்த பெரும் பிழைக்குக் கெஞ்சிடுவா ரெனநினைத்தாள்; கெஞ்சாம லவரிருக்கக் கேட்க லானாள். "பெண்ணுக்குப் பிழைசெய்த பெரும்பாவம் தனைஎண்ணிப் பேச்ச டைத்துக் கண்ணுக்கு விருந்தாக நிற்கின்ற தெதற்காக, காதல் செய்த புண்ணுக்கு மருந்தாகும் புண்ணியத்தை மறந்தாலும், புண்ணுண் டாக்க முன்னுக்கு வருகின்ற ஆணழகா! உனக்கிதுவே விளையாட் டாமோ? "அன்புக்கு அன்பும், உயர் அழகுக்கு அழகும், உடல்ஆ விதந்து பண்புக்குப் பண்புதரும் பணிவுக்குப் பணிவுதரும் பாசம் கொண்டேன். என்றைக்கு நின்விழியில் பட்டேனோ அன்றைக் கேஎனை யழித்துச் சென்றிட்ட நீஎதற்கே இன்றைக்கு என்னில்லம் திருப்ப வேண்டும்?" "மனங்கவரும் ரோஜாவாய் மணந்தஎனை ஏக்கத்தால் மஞ்சள் பூத்த பிணமாக்கிப் பூவரசம் பூவாக்கும் ஆசைநோய் பிடிக்கச் செய்து |